5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் கொரோனாவுக்கு 415 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தோனேசியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 1,487 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் 1800க்கு கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 100ஐ தாண்டிய கொரோனா
கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,000க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில்தான் மிக அதிகமாக 11,586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
5 மாநிலங்களில் அதிகம்
மகாராஷ்டிராவில் 4,877 பேருக்கும் தமிழகத்தில் 1785 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவில் 1,637; ஆந்திராவில் 1627 என ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஒடிஷா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்கள் இருந்து 72.45% பதிவாகி இருக்கிறது.
கேரளாவில் அதிகம்
இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் கேரளாவில் மட்டும் 39.02% பதிவாகி உள்ளது. கேரளாவில் மிக அதிகபட்சமாக 135 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒடிஷாவில் நேற்று கொரோனாவால் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,21,382. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,06,21,469. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,98,100.
கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97.39% ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 66,03,112 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.