இந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்!
டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமையன்று மட்டும் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,033 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்: புதியதாக 61, 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,94,552 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் டிஸ்சார்ஜ், மரணங்கள் எண்ணிக்கை
அதேநேரத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரேநாளில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 72,615 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 65,97,210 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1033 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,14,031.
ஆக்டிவ் கேஸ் நிலவரம்
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் - ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7,83,311. மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 1,85,270 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2வதாக கர்நாடகாவில் 1,10,647, 3-வதாக கேரளாவில் 96,008 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 40,192 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ்
உலக நாடுகளில் அமெரிக்காவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 26,86,191 . இதற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. 3-வதாக பிரான்ஸில் 729,109 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகின்றனர். 4-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,35,357.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பிரான்ஸில் புதியதாக 32,427 பேருக்கும் இங்கிலாந்தில் 16,171, இத்தாலியில் 10,925 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரேசிலில் 22,792, ரஷ்யாவில் 14,922 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.