பறக்குது சமாதான கொடி- இங்கிட்டு அரிசி..அங்கிட்டு பாமாயில்... களைகட்டும் இந்தியா-மலேசியா வர்த்தக உறவு
டெல்லி: மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்திய நிறுவனங்கள் மீண்டும் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது அரசியல் சாசனப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக மகாதீரின் குரல் ஒலித்தது. இதனால் இந்தியா- மலேசியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கொரோனா லாக்டவுன்: மே 22-ல் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு சோனியா அழைப்பு
மகாதீர் முகமது ராஜினாமா
இதனையடுத்து மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது. மற்றொரு பாமாயில் தயாரிப்பு நாடான இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா பாமாயிலை இறக்குமதி செய்தது. இந்நிலையில் மலேசியா அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. மலேசியா பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் முகமது விலகினார்.
புதிய பிரதமர் யாசின்
அவருக்குப் பதில் முகமது யாசின் மலேசியாவின் புதிய பிரதமரானார். இதன்பின்னர் இந்தியா -மலேசியா உறவில் இணக்கமான சூழ்நிலை திரும்பியது. மேலும் மலேசியாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வந்த மியான்மர், வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகியவை கொரோனாவை முன்வைத்து அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
மலேசியாவின் அரிசி இறக்குமதி
இதனால் அரிசி இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் மலேசியா அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்விளைவாக இந்தியாவில் இருந்து 1 லட்சம் டன் அரிசியை மலேசியா இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஆண்டு இறுதியில் 2 லட்சம் டன்னாக அதிகரிக்க இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் கச்சா சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்யப் போவதாகவும் மலேசியா அறிவித்திருந்தது.
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி
தற்போது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமளவு அரிசி இறக்குமதிக்கும் மலேசியா முன்வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இந்திய நிறுவனங்க்ளுக்கு கணிசமான விலை குறைப்புடன் பாமாயிலை வழங்கவும் மலேசிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.