இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி.. எஃப்டிஐ-யில் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா
டெல்லி: இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Recommended Video
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கிறது. அதாவது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்த முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
ட்விட்டர்
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா பாதிப்பை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகவும் அதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் அவர் மத்திய அரசை ஏப்ரல் 12-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தார்.
இரு முறைகள்
இதையடுத்து அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகள் இரு வகைகளில் அனுமதிக்கப்படுகின்றன. ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதியில்லாமல் தானாகவே முதலீடு செய்வது, இன்னொன்று இந்திய அரசின் அனுமதியை பெற்று அன்னிய நேரடி முதலீடு செய்வது.
கைப்பற்றுதல்
புதிய கட்டுப்பாடுகளின்படி இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் அன்னிய நேரடி முதலீடு செய்ய இந்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதாகும். இதன் மூலம் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கைப்பற்றுவதை தடுக்க முடியும்.
வங்கதேசம்
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள நிறுவனங்களோ அல்லது இந்தியாவில் செய்ய இருக்கும் முதலீடுகளால் பயன் பெற இருக்கும் நபர் வாழும் நாடு, இந்தியாவுடன் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டாலோ அன்னிய முதலீட்டை இனி இந்திய அரசின் அனுமதி பெற்றே செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்ய பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
சீனாவின் மத்திய வங்கி
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை சீனாவின் மத்திய வங்கி வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, மருந்து பொருட்கள் உள்பட 17 துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் இனி இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்.