அடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங்
டெல்லி: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மந்த நிலையால், இந்தியாவின் நிதித்துறை ஆழ்ந்த சிக்கலில் உள்ளது. எனவே அடுத்த ஆறுமாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களின் அளவு அதிகரிக்க போகிறது என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன்களின் அளவு மோசமாக அதிகரிக்கும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன்சில் (NCAER) நடத்திய 2020- ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார கொள்கைகள் குறித்த மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார்.
இதுவரை நடந்த கொரோனா தடுப்பூசி டிரையல் சக்சஸ்.. பக்கவிளைவு இல்லை.. அறிவித்த அமெரிக்க மருந்து நிறுவனம்
கவனம் தேவை
அப்போது அவர் பேசுகையில், " இந்த கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மோசமாக பாதிக்கும். வங்கிகளின் மோசமான கடன்களின் அளவு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடன் மதிப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டும். செலவினங்கள் மற்றும் மந்தநிலையிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடன்கள் அதிகரிக்கும்
பொருளாதார சீர்திருத்தம் குறித்து நிதியமைச்சரின் கட்டுரை முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. முந்தைய ஆட்சியாளர்களை குற்றம்சாட்டுகிறார். கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கடன்களின் அளவு மோசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நடவடிக்கை தேவை
நாம் இப்போது மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். விரைவாக இந்தப் பிரச்னையை தீர்க்க இந்த சூழலை உணர்ந்து தொடக்க நிலையிலேயே நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது. உதவி தேவைப்படும் மக்களுக்கு நிதி உதவிகள் சென்று சேருவதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.. ஜன்தன் வங்கிக்கணக்கு திட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு அதில் போதுமான அளவு வேலைகள் நடைபெறவில்லை.
வரவேற்பு
இந்தியப் பொருளாதாரத்தில் விவசாய துறை மட்டுமே ஆறுதல் அளிக்கும்படி சிறப்பாகச் செயல்படுகிறது.. வேளாண்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நீண்ட காலத்துக்குப் பேசும்படி இருக்க வேண்டும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், தானியங்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்து உள்ளது வரவேற்கிறேன்" என்றார்.