விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி பற்றாக்குறை.. இருளில் மூழ்கும் இந்தியா? மத்திய அரசின் திட்டம்தான் என்ன
டெல்லி: இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வந்தாலும் கூட தற்போதும் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன,
3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இந்தச் சூழலில் பல்வேறு காரணங்களால் நிலக்கரிக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது,

நிலக்கரி பற்றாக்குறை
நிலக்கரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் பற்றாக்குறையால், மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் சில மாகாணங்களில் ஏற்கனவே மின்வெட்டு தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தொழில்துறையினர் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம். ஏற்கனவே, கொரோனாவால் தொழில்துறையினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது அவர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்
கொரோனாவில் இருந்து இவ்வளவு விரைவில் மீண்டு வருவோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் கொரோனா தொடர்ந்து உருமாறிய வந்ததால், இயல்புநிலை திரும்பக் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தடுப்பூசியால் நிலைமை வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனால் மின் தேவை எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிகரித்தது. அதேபோல நிலக்கரி சுரங்கங்கள் அருகே பெய்த மழையும் நிலக்கரி வெட்டி எடுப்பதைச் சவால் நிறைந்த பணியாக மாற்றியது.

இந்தியாவின் நிலை
இதனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை பல மடங்கு அதிகரித்ததுள்ளது. இதனால் சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படத் தொடங்கியுள்ளது. சீனாவிலேயே இந்த நிலை என்றால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சொல்லவா வேண்டும். அதிலும் இந்தியாவில் சுமார் 60% மின் உற்பத்தி அனல் மின் நிலையங்களிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது.

இந்தியாவில் மின்வெட்டு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அனல் மின் நிலையங்களிலும் அடுத்த சில நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆந்திரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட அரசுகள் ஏற்கனவே மத்திய அரசிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மின் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. இந்தியாவில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர்கள் கூறினாலும் கூட, மத்திய அரசு நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு நடவடிக்கை
கடந்த சில நாட்களுக்கு மின், இது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா மத்திய மின்சார துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். சர்வதேச அளவில் அதிக அளவில் நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் தான், உலகிலேயே நிலக்கரியை வெட்டி எடுக்கும் மிகப் பெரிய நிறுவனம் ஆகும். மேலும், நிலக்கரியை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.

கோல் இந்தியா நிறுவனம்
இருப்பினும், தற்போதைய மின் தேவை திடீரென கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட தொடங்கியுள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருக்கும் கையிருப்பு கூட போதாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்கக் கோல் இந்தியா நிறுவனமும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மின் உற்பத்தியைத் தவிரப் பிற தேவைகளுக்கு நிலக்கரி வழங்குவதை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

முக்கிய நடவடிக்கை
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இது தேசத்தின் நலன் கருதி, தற்காலிக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தியைத் தவிரப் பிற தேவைகளுக்கு நிலக்கரி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான 135 நிலக்கரி மின் நிலையங்களில் மூன்று நாட்களுக்குக் குறைவான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு
மேலும், நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு முறைகேடாக வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இப்படி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, நிலைமை கட்டுக்குள் இருக்குமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.