இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300% அதிகரித்தும் அவசர சிகிச்சை படுக்கைகள் 19%தான் அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போதைய கொரோனா பாதிப்பு 300% அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை வெறும் 19%தான் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன அரசு புள்ளி விவரங்கள்.
இந்தியாவில் முதலாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் பாதிப்பு 97,894. அதே மாதத்தில் இந்தியாவில் அவசர சிகிச்சை(ஐசியூ) படுக்கைகள் எண்ணிக்கை 63,578..
கடந்த ஏப்ரல் 4-ந் தேதி முதல் அலையின் உச்சத்தை தாண்டி ஒருநாள் பாதிப்பு 1.03 லட்சமானது. அப்போது உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஏப்ரல் 15-ந் தேதியன்று ஒருநாள் பாதிப்பு 2 லட்சமாகவும், ஏப்ரல் 22-ல் 3 லட்சமாகவும் உயர்ந்தது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,10,822; 4,090 பேர்ர் பலி மகாராஷ்டிராவில் தொடரும் மரண ஓலம்!
பாதிப்பும் படுக்கைகளும்
மே 1-ந் தேதியன்று இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4.01,993 ஆகவும் மே 7-ந் தேதி 4,14,188 ஆகவும் இந்த ஒருநாள் பாதிப்பு உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 75,867 மட்டும்தான். அதாவது ஒருநாள் பாதிப்பு என்பது 323% அதிகரித்த போதும் கூட அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 19%தான் அதிகரிக்கப்பட்டு இருந்தது என்கிறது அரசின் தகவல்கள்.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்த அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 24,000. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜனவரி மாதத்தில் அவசர சிகிச்சை படுக்கைகள் எண்ணிக்கை 36,008 ஆக குறைந்துவிட்டது. அப்போது இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகவே குறைந்தது.
மாநில நிலவரங்கள்
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையவும் தொடங்கியுள்ளது. அப்படியான நிலையிலும் பல மாநிலங்களில் அவசர சிகிச்சை படுக்கைகள் காலியாகவும் இல்லை என்கின்றன அரசு தரவுகள். மும்பையை எடுத்துக் கொண்டால் மொத்தம் 2,984 அவசர சிகிச்சை படுக்கைகளில் 277 மட்டும்தான் காலியாக உள்ளன
தமிழக நிலவரம்
கோவாவில் சனிக்கிழமை மாலை மொத்தம் உள்ள 249 அவசர சிகிச்சை படுக்கைகளில் எதுவும் காலி இல்லை. டெல்லியில் மொத்தம் உள்ள 6313 படுக்கைகளில் 558 மட்டும்தான் காலியாக இருந்தன. தமிழகத்தில் 8,957 அவசர சிகிச்சை படுக்கைகளில் 492 மட்டும் காலியாக இருந்தன. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளா, சத்தீஸ்கரில் நிலவரம் பரவாயில்லை என்கிற அளவில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.