அதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு
டெல்லி: ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது அரசுகளின் கருத்து.
இதுவரை இல்லாத வகையில் ஆந்திராவில் இன்று மட்டும் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் உச்சம்
இதனையடுத்து தமிழகம், டெல்லி மாநிலங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஆந்திராவில் பயங்கரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஆந்திராவில் கொரோனாவால் மொத்தம் 1,07,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 1,148 பேராகவும் உயர்ந்திருக்கிறது. ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 62,979 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா, தமிழகம்
மகாராஷ்டிராவில் இன்று மொத்தம் 7,717 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,91,440 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 282 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இம்மாநிலத்தில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 14,165 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உச்ச மோசம்
கர்நாடகாவிலும் இதுவரை இல்லாத உச்சமாக இன்று 5,536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 102 பேர் உயிரிழந்தனர். இதனால் கர்நாடகாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 2063 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று மட்டும் பெங்களூரு நகரில் 40 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
இந்தியாவில் 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 15 லட்சத்தை கடந்துவிட்டது. தற்போதைய நிலையில் 15,24,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 34,147ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து இந்தியாவில் மீண்டவர்கள் எண்ணிக்கையானது 5,07,518 ஆக உயர்ந்திருக்கிறது.