இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது- 11 நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகம்- அதி உச்சம்!
50 லட்சத்தை கடந்த பாதிப்பு
இதனால் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,20,360. கடந்த 11 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
10 லட்சத்தை கடந்த மகாராஷ்டிரா
கொரோனாவால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,39,111. உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,091. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 20,482 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் இம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,97,856 ஆக உயர்ந்தது.
30 ஆயிரத்தை கடந்த மரணங்கள்
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 515 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர். இங்கு கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 30,409. மகாராஷ்டிரா கொரோனா மரணங்கள் எண்ணிக்கை பிரான்ஸ், பெரு நாடுகள் பாதிப்பை நெருங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,75,273. ஆந்திராவில் ஒரே நாளில் 8,846 பேருக்கு தொற்று உறுதியானது. இங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,83,925. ஆந்திராவில் 4,86,531 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்
5 லட்சத்தை தாண்டிய தமிழகம்
தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருக்கின்றனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,502 ஆகவும் உள்ளது. கொரோனா மரணங்களில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது.தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,58,900