இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா...16,577 புதிய பாதிப்பு; மகாராஷ்டிரா, கேரளா முக்கிய காரணம்!
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொற்றுக்கு மேலும் 120 பேர் பலியாகி உள்ளனர். 12,179 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவை விரட்டியடிக்க இந்தியாவில் இதுவரை 1,34,72,643 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
16,577 புதிய பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு மேலும் 120 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் 12,179 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு 1,10,63,491 ஆக உயர்ந்துள்ளது.
1,34,72,643 பேருக்கு தடுப்பூசி
கொரோனாவுக்கு இதுவரை 1,56,825 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,07,50,680 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில்1,55,986 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் நாடு முழுவதும் கோவோக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 1,34,72,643 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. நாடு முழுவதும் 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு வருகிற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.