இந்தியாவில் 14,264 பேருக்கு கொரோனா... கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களால் சற்று அதிகரிக்கும் பாதிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கு மேலும் 90 பேர் பலியாகி உள்ளனர்.
நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுத்து தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 1,10,85,173 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கொரோனா ஆட்டம்
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் விரைவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என தெரிகிறது.
14,264 புதிய பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கு மேலும் 90 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் 11,667 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு 1,09,91,651 ஆக உயர்ந்துள்ளது.
1,10,85,173 பேருக்கு தடுப்பூசி
கொரோனாவுக்கு இதுவரை 1,56,302 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,06,89,715 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில்1,45,634 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.25% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.42% ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 1,10,85,173 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.