திடீரென உயரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு.. உ.பி-யில் ஒருவர் பலி!
கொரோனா பாதிப்பு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் திடீரென 128 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் 1,764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென கொரோனா பரவல் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா அதற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் வேகமாக பரவி சமூக பொருளாதார இழப்பை அதிகளவில் ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சுமார் மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.
இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவியது.
இந்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு மட்டும் 5.94 லட்சம் கோடி.. சீனா ஒதுக்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கொரோனா
இதைனையடுத்து கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. இதன் பின்னர் தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த மாதத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
கொரோனா வேரியண்ட்
கொரோனாவின் புதிய வேரியண்ட் ஆன கொரோனா பிஎஃப் 7 காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் இருந்தன. குறிப்பாக சீனா, அமெரிக்கா , ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக இந்தியாவிலும் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
திடீரென உயர்ந்த கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் புதிதாக 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,764ஆக உள்ளது. அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 741ஆக உயர்ந்துள்ளது.
220 கோடி கொரோனா தடுப்பூசி
அதேபோல் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 147 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 519 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.09ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக உள்ளது. அதேபோல் இதுவரை நாடு முழுவதும் இதுவரை 220.52 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.