நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.. பிரதமர் மோடி துவங்கி வைப்பு!
டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 16ம் தேதியன்று துவக்கி வைக்க உள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்தது. இது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்.ஐ.ஐ) நிறுவனத்தால், கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்படும் தடுப்பூசியாகும்.
மேலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின், முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு தடுப்பூசிகளும், அவசர கால தடுப்பூசிகளாகும். அதாவது அரசால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும்.
ஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்!
இந்தியாவில் ஒத்திகை
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற பல நாடுகளில் தடுப்பூசி பணிகள் ஆரம்பித்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக நாளை தடுப்பூசி போடும் பணிகள் துவங்குகிறது. இதையொட்டி ஏற்கனவே இருமுறை, ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் துவக்கி வைப்பார்
பிரதமர் நரேந்திர மோடி, மோடி கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஒட்டு மொத்த நாட்டுக்கும், நாளை காலை 10:30 மணிக்கு துவங்கி வைப்பார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 3,006 செஷன்ஸ் சைட்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) உட்பட நாடு முழுவதும் சுமார் 60 மருத்துவமனைகள் வீடியோ கான்பரன்சிங் வசதிக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி
மருத்துவமனைகள் முதல் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகள் வரை பலவிதமான பொது சுகாதார மையங்களில், ஒரே நேரத்தில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அப்போது சில மருத்துவ ஊழியர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாடுவார்.
3 லட்சம் பேருக்கு ஊசி
ஹெல்த்கேர் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள். முன்கள ஊழியர்கள் என்று, மாநில மற்றும் மத்திய காவல் துறை, ஆயுதப்படைகள், ஊர்க்காவல் படையினர், சிறை ஊழியர்கள், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு, நகராட்சித் தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வருவாய் அதிகாரிகள் வருவார்கள். இவர்களுக்குத்தான் முதல் கட்டமாக தடுப்பூசிகள் போடப்படும். முதல் நாளில் 3 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.
3 கோடி பேருக்கு தடுப்பூசி
முதலில் 1 கோடி சுகாதார ஊழியர்களுக்கும், சுமார் 2 கோடி முன்கள ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான செலவு அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறதாம். அடுத்தகட்டமாக, 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
தடுப்பூசி போடும் கால அவகாசம்
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி போடப்படும். வழக்கமான தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி, தடுப்பூசி போட பதிவு செய்ய வேண்டிய கோ-வின் செல்போன் செயலி மற்றும் சாப்ட்வேர் தொடர்பான சந்தேகங்களை 1075 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் அறியலாம். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கால்சென்டர் திறக்கப்பட்டுள்ளது.