அமெரிக்காவை தாண்டியாச்சு.. கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் அதிகம்
டெல்லி: நேற்று நிலவரப்படி இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,01,468 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். ஒரே நாளில் இத்தனை நோயாளிகள் மீண்டது இதுதான் முதல் முறையாகும்.
உலகிலேயே கொரோனாவிலிருந்து அதிகம் பேர் மீண்டுள்ளது இந்தியாவில்தான் என்ற சாதனையும் பதிவாகியுள்ளது. நம்மை விட அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகமாகும்.
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 24 மணி நேரத்தில் 75,083 கேஸ்கள் மற்றும் 1,053 இறப்புகள் பதிவாகின. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டி 56,40,496 என்ற அளவில் இருந்தது.
தொடர்ந்து நான்காவது நாளாக, தினசரி கேஸ்களை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவிய தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 45 லட்சம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர். எனவே, ஒட்டுமொத்த மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சைக்கு பிறகு மீண்டவர்கள் எண்ணிக்கை 43,46,110 ஆகும். எனவே உலகிலேயே அதிகம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டது இந்தியாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.