இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா 2,00,739 ஒரே நாளில் பாதிப்பு - 1,038 பேர் மரணம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1038 பேர் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1038 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,73,123 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
உலகமே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. 14 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்கள் வீரியம் குறைந்திருந்த கொரோனா மீண்டும் இரண்டாவது அலையாக வீசத் தொடங்கியுள்ளது. பல மாநிலங்களில் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வட மாநிலங்களில் கொத்துக்காக ஏற்படும் கொரோனா மரணங்களால் சுடுகாடுகள், இடுகாடுகளில் பிணக்குவியல்கள் இரவு பகலாக வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவமனை பிணவறைகளில் சடலங்களை வைக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருத்துவர்களும், செவிலியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
2 லட்சம் பேர் பாதிப்பு
ஒரே நாளில் புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது.
93,528 பேர் மீண்டனர்
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 93,528 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,24,29,564 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 14,71,877 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,038 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பலி
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 58,952 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தைவிட சற்றே குறைவு. ஒரே நாளில் 278 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 35,78,160 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,804 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
தீவிரமாக பரவும் கொரோனா
மகாராஷ்டிராவை அடுத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தராவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில், புதிதாக 17,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில், கடந்த 24 மணி நேரத்தில் 11,265 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு ஏதும் அமலுக்கு வராது எனக் கூறியுள்ள அம்மாநில அரசு வரும் 20ம் தேதி 7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தானில் அன்றாட பாதிப்பு 6,200 என்று பதிவாகியுள்ளது. அங்கு நாளை முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
தடுப்பூசி போடும் பணி
நாடு முழுவதும் இதுவரை 11,44,93,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.