ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தியா.. பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தும் அமெரிக்கா
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும்பட்சத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா ராணுவம் கடந்த காலங்களில் தனக்குத் தேவையான பாதுகாப்பு தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்தே வாங்கி வந்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து விலகி, அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை வாங்க முதல்கட்டமாக 800 மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அளித்தது.
டிரம்ப் அரசு எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்க 5.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பைடனும் அதோ முடிவு
டிரம்ப் நிர்வாகம் இன்னும் சில நாட்களே இருக்கும் என்பதால் அடுத்து அமையும் பைடன் அரசு இந்தியாவுக்குச் சாதகமான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பைடன் அரசும் ரஷ்யா விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதால் அது இந்தியாவுக்கு எதிராகவே இருக்கும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா விளக்கம்
சீனாவுடன் இமயமலை பகுதியில் மோதல் போக்கு நிலவுவதால் இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைகள் தேவை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு நிலவுகிறது. அதே நேரம் இந்தியா ரஷ்யாவுடனும் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது. இந்தியா எப்போதும் ஒரு சுதந்திர வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. இது நமது ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதிலும் பொருந்தும்" என்றார்.
அமெரிக்கா அதிருப்தி
இருப்பினும், இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் ஒப்பந்தம் குறித்த அமெரிக்காவுக்குத் தெரியும் என்றாலும் இதுவரை எஸ் 400 ஏவுகணைகளை இந்தியாவிடம் ரஷ்யா வழங்கவில்லை என்பதால் தற்போது இந்த விஷயத்தில் அமெரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்ய வேண்டும்
மேலும், "எங்கள் கூட்டணி நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எந்த ராணுவத் தளவாடங்களையும் வாங்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. இந்தியா-ரஷ்யா ஒப்பந்தத்திற்கு மட்டும் நாங்கள் எவ்வித சலுகையையும் அறிவிக்கவில்லை. எனவே இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாமல் இருக்க, இந்திய இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்றார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களைப் பெற்றதற்காகத் துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த விஷயத்தில் ரஷ்யா எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.