இந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்!
டெல்லி: இந்திய பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டு காலாண்டில் மோசமான நிலையை சந்தித்த நிலையில் இறுதியாக அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியிருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு தரவுகள், வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிடப்பட்டது.
8 சதவீதம் சரிவு
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதம் சரிவடையலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். முன்பு இது 7.7 சதவீதமாக சரிவடையலாம் என கணிக்கப்பட்டது.
கடும் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் 2020-21ம் நிதியான்டின் முதல் காலாண்டிலேயே ஜிடிபி வளர்ச்சி 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் -23.9 சதவீதமாக சரிவை கண்டது. இரண்டாவது காலாண்டில் அது -7.5 சதவீதமாக சரிந்தது. அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாத முதலாம் காலாண்டில் -24.4 சதவீதமாகவும் இரண்டாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை -7.7 சதவீதமாகவும் இருந்தது.
0.4 சதவீதம்
இந்நிலையில் பொருளாதார வல்லுநர்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மூன்றாம் காலாண்டில் அதிக பொருளாதார நடவடிக்கைகளின் பின்னணியில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்த்தனர். ஏனெனில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையையும் குறைந்து இருந்தது. இந்நிலையில் பல்வேறு சவலான கட்டத்தை இந்தியா கடந்த ஆண்டு கடந்துவிட்ட நிலையில் வளர்ச்சியை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நல்ல வளர்ச்சி
இந்நிலையில ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நாட்டில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்பணி தொடங்கி உள்ள இந்த நேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் மேம்படும் என்று பல ஆராய்ச்சி நிறுவனங்களும் பொருளாதார வல்லுனர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் அதேவேளையில் சில ஆய்வாளர்கள் நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவது மற்றும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதை குறிப்பிட்டும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.