சுகாதார சீர்கேடுகள் இத்தனை இருந்தும்.. இந்தியாவில் கொரோனா மரணம் கம்மி.. ஆச்சரியப்படும் ஆய்வாளர்கள்!
டெல்லி: இந்தியாவின் சுகாதார சூழலானது மக்களிடையே கொரோனா எதிர்ப்பு சக்தியை கொடுத்திருக்கிறதா? என்கிற கேள்வியை கொரோனா மரணங்கள் எழுப்பியிருக்கின்றன.
உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,06,112. இந்தியாவில் மொத்தம் 1,22,642 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிற நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிடுகையில் கொரோனா மரணங்கள் நம்மில் குறைவுதான்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் மட்டுமே பல லட்சம் பேர் மாண்டுபோவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆட்கொல்லி நோய் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் ஏகப்பட்ட கேள்விகளை அடுக்குகிறது.
சுகாதாரமும் கேள்விகளும்
கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள அடிப்படையான தேவைகள், பாதுகாப்பான குடிநீர்- வாழும் இடத்தின் தூய்மை- சுகாதார பாதுகாப்பு இவைதான் என்கிறது உலக சுகாதார அமைப்பு. மேலோட்டமாகவே பார்த்தாலுமே இது இந்தியாவில் எப்படி சாத்தியம்? அப்படியானால் கொரோனாவால் கொத்து கொத்தாகத்தானே மடிந்திருக்க வேண்டும் என்கிற கேள்வி வரும்.
ஆய்வாளர்கள் ஆச்சரியம்
கைகளை கழுவுவதற்கான அடிப்படை வசதிகள் கூட வளரும் நாடுகளில்- அதாவது உலகில் 40% மக்கள் வாழும் நாடுகளில் இல்லை என்கிறது யுனிசெப். உலக நாடுகளின் கொரோனா மரணங்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட இந்தியாவில் மிக குறைவானதாகவே இருக்கிறது. அப்படியானால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இளம்பிராயத்தில் இருந்தே நோய் எதிர்ப்பு சக்தி என்பது வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறதோ என கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
பொய்யான பேரச்சம்
கொரோனா பரவலின் போது சமூக இடைவெளி அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இப்போதும் சமூக இடைவெளியின் அவசியம் பற்றி பேசுகிறோம். அதனால் தாராவி போன்ற இடைவெளியே இல்லாத பெருங்குடியிருப்புகள், சமூக இடைவெளிக்கே சாத்தியமில்லாத கிராமங்கள் எல்லாவற்றையும் கொரோனா சூறையாடிச் செல்லுமோ என்கிற அச்சம் இருந்தது. ஆனால் இந்த 7 மாத கொரோனா காலத்தில் இத்தகைய பேரச்சம் பொய்த்துப் போயிருக்கிறது அல்லவா?
சாத்தியம் இல்லாத இடைவெளி
கிராமங்களில் தெருக்குழாயில் குடிநீர் பிடிக்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நிற்க வேண்டியதாக இருந்தால் அனேகம் ஒவ்வொரு ஊர் மக்களும் அடுத்த பல கிராமங்கள் வரை வரிசைகளில்தான் நிற்க நேரிடும். அந்த அளவுக்கு நமது கிராமங்கள் நெருக்கமாக பின்னி பிணைந்திருக்கின்றன. மழைநீர் கொட்டுவதற்கு கூட இடைவெளி இல்லாமல்தான் நமது தெருக்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியும் கூட கொரோனா நம்மிடம் வாலட்ட முடியாமல் போயிருக்கிறது.
ஆய்வுகளுக்கு விடை எப்போது?
கொரோனாவால் பேரழிவை இந்தியா எதிர்கொள்ளலாம் என அஞ்சிய சமூக, அறிவியல் ஆய்வாளர்கள் இப்போது இந்தியர்களின் கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்து அதிசயத்துடன் ஆய்வு செய்கின்றனர். கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கையைவிட, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வுகளின் முடிவுகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. நம்மை அறியாமலேயே வந்து நம்மிடம் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிட்டு குட்பை சொல்லி விடைபெற்றிருக்கிறது கொரோனா என்பதெல்லாம் ஆச்சரியம்தரும் விடைகாண வேண்டிய ஆய்வுகளே.