எங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை! பாக். ஷாக்
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக இருந்தாலும், பலூசிஸ்தான் மக்கள், பாகிஸ்தானின் ஆதிக்கம் மற்றும் அதன் ராணுவ கெடுபிடிகளில் இருந்து தங்கள் நிலத்தை விடுவிக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்று கூறி கோரிக்கைவிடுத்துள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண மக்கள், தங்களை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் போராட்ட குழுவை சேர்ந்த அட்டா பலோச் இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், கூறிய ஒரு தகவல் பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
குரல் எழுப்புங்கள்
எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். கடந்த 70 ஆண்டுகளில் நீங்கள் பெற்ற வெற்றி இந்தியர்களை பெருமைப்படுத்துகிறது. இன்று, இந்தியர்கள் உலகம் முழுவதும் பெருமையோடு வாழ்கிறார்கள். பலுசிஸ்தானை சேர்ந்த நாங்கள் அவர்களின் ஒற்றுமை மற்றும் உதவிக்கு நன்றி தெரிவிக்கிறோம். பலூசிஸ்தான் விடுதலைக்கு நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை. நன்றி ஜெய் ஹிந்த். இவ்வாறு கூறியுள்ளார் அவர்.
வளங்கள்
பாகிஸ்தானின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் உள்ளது பலுசிஸ்தான். 1948ல் பாகிஸ்தான் இப்பகுதியை ஆக்கிரமித்தது முதல், அப்பிராந்திய மக்களில் கணிசமானோர் சுதந்திரம் தேவை என போராடி வருகிறார்கள். இந்த பகுதியில், இயற்கை எரிவாயு வளம் அதிகம் உள்ளது.
சீனா தலையீடு
சீனா பாகிஸ்தான் நடுவே பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்த பிறகு, போக்குவரத்து நெட்வொர்க்குகள், ஏராளமான எரிசக்தி திட்டங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, சீனா தங்கள் பொருளாதார செல்வத்தை சூறையாடியது என்பதும் பலுசிஸ்தான் மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு சிக்கல்
மற்றொரு பலுசிஸ்தான், போராட்ட ஆர்வலர் அஷ்ரப் ஷெர்ஜனும் இந்தியாவின் தலையீட்டை விரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து இடங்களிலும் பலூசிஸ்தான் விவகாரத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக பேச வேண்டும் என்று அஷ்ரப் வலியுறுத்தினார். எனது அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து இடங்களிலும் பலூசிஸ்தான் விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக கிளப்ப இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் மற்றும் அதன் ராணுவ பிடியில் இனப்படுகொலைக்குள்ளாகி வருகிறார்கள், என்று ஷெர்ஜன் தெரிவித்தார். இதுபோன்ற கோரிக்கைகளால் காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தலையிடும் நிலையில், பலுசிஸ்தான் விவகாரம், அதற்கு தலைவலியாக மாறியுள்ளது.