பல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்!
டெல்லி: நாடு பிரிவினையின் போதுதான் அந்நாளைய தலைமுறை அத்தனை பெரிய சோகக் காட்சிகளை கண்டிருக்கும்..
Recommended Video
தலைசுமையாய் உடைமைகளையும் உறவுகளையும் தூக்கிக் கொண்டு நெடுஞ்சாலைகளில் உயிரைப் பிடித்து கொண்டு தப்பி ஓடிய மனிதப் பேரவலம் அன்று 1947-ல் நிகழ்ந்தது..
இப்போதும் தலைசுமையாய் உடைமைகளையும் உறவுகளையும் சுமந்து கொண்டு அதே நெடுஞ்சாலைகளில் உயிர் பிழைத்தால் போதும் என ஓட்டமும் நடையுமாய் வெற்று காலில் ஓடினார்கள் பல லட்சம் தொழிலாளர்கள்
நெடுஞ்சாலை அகதிகள்
இந்த காட்சியைக் கண்டுதான் ஒட்டுமொத்த தேசமே விக்கித்துப் போனது... என்ன நடக்கப் போகிறதோ என எதுவும் தெரியாமல் குமுறியது. ஆம் கொரோனா கொடுந்தொற்று பரவாமல் இருக்க திடுமென மத்திய அரசு நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்தது. ஆனால் இந்த முடக்கத்தில் சிக்கிக் கொண்டால் ஒட்டுமொத்த வாழ்வுமே முடங்கி உயிரிழக்கத்தான் நேரிடும் என அஞ்சிய அன்றாடங்காய்ச்சிகள்தான் அரக்க பரக்க கிடைத்ததை தூக்கிக் கொண்டு நெடுஞ்சாலை அகதிகளாய் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக பித்தர்களைப் போல பாத வலிகளுடன் அலைந்தார்கள்..
தொழிலாளர்களின் மவுனம்
நெஞ்சில் வலிகளையும் ரணங்களையும் சுமந்து கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல் மவுனிகளாக அந்த நிராதரவான தொழிலாளர்கள் முழக்கங்கள் எதுவுமே இல்லாமல் நடத்திய மவுன யுத்தம் இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்பது மிகையும் அல்ல. கர்ப்பிணிகள் பட்டினியுடன் பல நூறு மைல்கள் நடந்தார்கள்.. பிஞ்சு கால்கள் நெடுஞ்சாலை தார் வெப்பத்தில் தகித்தன.. தடுத்து நிறுத்தி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்கள்.. தடுத்து நிறுத்தி ஒருவேளை உணவும் கொடுத்தார்கள் பொதுமக்கள் - அரசுகள். அல்ல
பசி பலி கொள்ளுமே
இவர்களிடம் இருந்து வெளிப்பட்ட பொதுப்படையான ஒற்றை பதில்.. கொரோனாவை கண்டு எங்களுக்கும் அச்சம் இல்லாமல் இல்லை.. ஆனால் கொரோனா எங்களை கொல்லும் முன்னர் பட்டினி எங்களை பலி கொள்ளுமே என்கிற கதறல்தான். அப்படி புறப்பட்ட பல லட்சம் பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது என்பது தெரியாது.. அவர்களால் எத்தனை கிராமங்கள் கொரோனாவின் கொடும்பிடியில் சிக்கப் போகிறது என்பதும் தெரியாது..
வாழ்வாதாரம் என்னவாகும்?
ஆனாலும் அவர்களைத் தடுக்க முடியாமல்தான் அரசுகள் திணறின. இதனால்தான் இப்போது இத்தகைய தொழிலாளர்களின் நெடுஞ்சாலைகளின் நீண்ட பயணங்களுக்கு அரசுகள் தடை விதித்துள்ளன. இத்தகைய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படித்தான் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கப் போகிறார்களோ? அரசுகள் என்னதான் செய்யப் போகின்றனவோ?