கவனமாக பேசுங்கள்.. ஈரானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்.. தூதருக்கு சம்மன்.. வெடிக்கும் சண்டை!
டெல்லி கலவரத்திற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி கலவரத்திற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது.
பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும், என்றுள்ளார்.
வேறு என்ன
மேலும் அவர் தனது கண்டனத்தில் முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடி இருக்கிறார். இதில் அனைத்து இந்தியர்கள் என்ற வார்த்தையில் அனைத்து என்பதை (ALL) என்று பெரிய வார்த்தைகளில் எழுதி உள்ளார். டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு எப்படி
தற்போது இதற்கு மத்திய அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், டெல்லியில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கள் மத்தியில் அமைதியும், நம்பிக்கையும் திரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். கூடுதலாக அங்கு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள்
உலக நாடுகள், அமைப்புகள் டெல்லி கலவரம் குறித்து பேசும் போது கவனமாக பேச வேண்டும். மிக முக்கியமான கட்டத்தில் பேசும் நீங்கள், தவறான பொறுப்பற்ற கருத்துக்களை கூற கூடாது. இது தவறானது என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்தியாவிற்கான ஈரான் தூதர் அலி செக்கெனிக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமே என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி கலவரம்
இந்தியாவிற்கு எதிராக டெல்லி கலவரத்தின் போது இந்தோனேசியாதான் முதலில் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசை, இந்தோனேசியா கடுமையாக கண்டித்து இருந்தது. அதன்பின் துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவை கண்டித்து இருந்தது. தற்போது ஈரான் இந்தியாவை நேரடியாக கண்டித்துள்ளது. இதனால் இந்தியா மீது இஸ்லாமிய நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.