டீல் ஓகே ஆகிடுச்சு.. '100 ஸ்பைஸ்' வெடிகுண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு
டெல்லி: 100 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை கையெழுத்தானது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச்செயல் காரணமாக தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பாகிஸ்தானில் பால்கோட் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம் மீது குண்டுகளை வீசிவிட்டு பாகிஸ்தான் ரேடார்களிடம் இருந்து சிக்காமல் தப்பி வந்தன.
அப்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானில் வீசப்பயன்படுத்தியது ஸ்பைஸ் 2000 என்ற வெடிகுண்டு ரகம் ஆகும். இந்த குண்டுகளால் பாகிஸ்தானின் பால்கோட்டில் கட்டிடங்கள் எதுவும் முற்றிலும் வெடித்துச் சிதறவில்லை. ஆனால் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் இறந்து போயினர்.
இதையடுத்து இந்திய விமானப்படை முற்றிலும் கட்டிடத்தை சிதைத்து தரைமட்டம் ஆக்கும் அல்லது பதுங்கு குழிகளை முற்றிலும் அழிப்பதற்கான மார்க் 84 வகையிலான அதீத சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் முதல் பாதுகாப்பு தளவாட ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் ஆகி உள்ளது. இந்தியா இஸ்ரேலிடம் பாதுகாப்புக்காக அதீத சக்திவாய்ந்த மார்க் 84 ரகத்தைச் சேரந்த 100 ஸ்பைஸ் வெடிகுண்டுகளை அவசர கால திட்டத்ன் கீழ் 300 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த மார்க் 84 ரக ஸ்பைஸ் வெடிகுண்டுகள், ஸ்பைஸ் 2000 வெடிகுண்டின் அப்டேட் வெர்சன் ஆகும். இந்த குண்டினை 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபடி, இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்க முடியும். இதற்கென சிறப்பு வாய்ந்த வசதிகள் அந்த வெடிகுண்டில் உள்ளது.