கொரோனா தடுப்பூசியில் இந்தியா புதிய சாதனை... நாடு முழுவதும் இதுவரை 1 கோடி பேருக்கு தடுப்பூசி!
டெல்லி: இந்தியாவில் தற்போது வரை 1,01,88,007 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 10,896 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தாக்கம்
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் நின்றபாடில்லை. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
சில மாநிலங்களில் அதிகம்
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அடங்க மறுக்கிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷுல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதலில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்
இந்தியாவில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களே பெருமளவில் தயக்கம் காட்டினார்கள். தடுப்பூசிகள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று கருதியும், கோவேக்சின் மீது நம்பிக்கை இல்லாமலும் பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வந்தது.
1 கோடிக்கு தடுப்பூசி
இந்த நிலையில் இந்தியா ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,01,88,007 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 10,896 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.