கொரோனா டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் சரியில்லை.. இப்படி இருந்தால் நிலை மோசமாகும்.. நிபுணர்கள் வார்னிங்
டெல்லி: உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. ஆனால், COVID-19 சோதனை மையங்களை அதிகரிக்குமாறு, உலக சுகாதார அமைப்பு (WHO) கூறும் அறிவுறுத்தலை, அரசு செயல்படுத்தவில்லை. இது கொரோனா வைரஸ் பாதிப்பை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரித்துள்ளன.
Recommended Video
கொரோனா, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு அறிவுரை கொடுத்துள்ளது. அதன்படி, முடிந்தவரை பரவலாக அனைத்து மக்களையும், கொரோனா தொடர்பாக சோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்தவர்களை மட்டுமே இந்தியா பரிசோதித்து வருகிறது, அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களை இரண்டு வார தனிமைப்படுத்தல் செய்கிறது.
உலக சுகாதார அமைப்பு
8,000 பேர் வரை சோதிக்க திறன் இருந்தபோதிலும், இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 90 சோதனைகளை மட்டுமே நடத்துகிறது. அசோசியேட்டட் பிரஸ் ரிப்போர்ட்படி, இதுவரை 11,500 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு, WHO வழிகாட்டுதல் பொருந்தாது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏனெனில் கொரோனா நோய் பரவுவது மற்ற இடங்களை விட இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பொருந்தாது
நாட்டின் உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைவரான பலராம் பார்கவா, சமூக நோயாக கொரோனா இந்தியாவில் மாறவில்லை என்பதால், உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை, இந்தியாவிற்கு இப்போது தேவையில்லை என்று கூறியுள்ளார். அப்படி எல்லோரையும் சோதித்து பார்த்தால், அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
சோதிக்கவில்லை
கடந்த வாரம், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையை அணுகியுள்ளார் ஒரு பிரிட்டிஷ் குடிமகன்.
ஆனால், இந்தியாவின் சோதனை அளவுகோல்களின் கீழ், அவருக்கு சோதனை செய்ய தேவையில்லை, தகுதி இல்லை என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்துள்ளனர். காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற பிற நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கத்திற்கு நிறைய செலவாகிறது. எனவே கொரோனா சோதனைக்கு கூடுதல் செலவு தேவையில்லை என அரசு நினைக்கிறது.
கட்டமைப்பு ரெடி
இதுபோன்ற சோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர் கூறியபோதிலும், அதிகாரிகள் தங்கள் ஆய்வக சோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் ஒருவேளை பெரிதாக கொரோனா பரவினால் அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாகக் கூறினர். இந்தியாவில் இப்போது, 52 கொரோனா வைரஸ் சோதனை மையங்கள் உள்ளன. குறுகிய சோதனை விளைவாக, கொரோனா வைரஸ் நோய்வாய்ப்பட்டவர்கள் அறியாமலேயே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே சில வல்லுநர்கள், இந்தியாவின் அரசாங்க புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு அங்கு அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.
மக்கள் தொகை அதிகம்
இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நெரிசலான நகரங்களில் வாழ்கின்றனர், பலர் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் உள்ளனர். இதுதான் பிரச்சினை. "சமூகம் சமூகமாக இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்னும் விரிவான சோதனை மூலம் மட்டுமே அதை தெரிந்து கொள்ள முடியும்" என்று போபாலில் உள்ள உலக சுகாதார ஆராய்ச்சியாளர் டாக்டர், அனந்த் பன் கூறினார்.
இந்தியா மற்ற நாடுகளை விட முதியவர்கள் விகிதாச்சாரத்தை குறைவாகக் கொண்டுள்ளது, இளைஞர்கள் அதிகம்தான். ஆனால் அதன் சுகாதார வசதிகள் குறைவானவை. பிற நோயாளிகளுக்கு இடமளிக்கவே மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
தயக்கம் ஏன்?
சோதனையை விரிவுபடுத்த இந்தியா தயக்கம் காட்ட காரணம், பீதியைத் தூண்டும் என்பது மட்டுமல்ல, செலவும் முக்கிய காரணமாக உள்ளது. நோயாளிகளுக்கு சோதனைகள் இலவசம் என்றாலும், அவை அரசுக்கு தலா 5,000 ரூபாய் செலவை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நிதியுதவி குறைவாக பெறும் பொது சுகாதார துறைக்கு, இது பெரிய பாரம். இந்தியா தனது மொத்த பட்ஜெட்டில் 3.7 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என அச்சப்பட மேலும் ஒரு காரணமும் இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து மக்கள் தப்பி ஓடுகிறார்கள், அங்கு மோசமான நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறுகிறார்கள். நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்படி தப்பியோடியவர்களை பார்த்துள்ளோம். இதெல்லாம் கூட இந்தியாவின் நிலைமையை மோசமாக்க காரணங்களாக மாறக்கூடும்.