கால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா-சீனா உறவு சீர்குலைந்துள்ளது: ஜெய்சங்கர்
டெல்லி: லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா- சீனா உறவுகள் சீர்குலைந்து போயுள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆசியா சொசைட்டி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகின் காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, சீனா,ரஷ்யா காரணமாம்.. சொல்வது டிரம்ப்
1993 முதல் ஒப்பந்தங்கள்
1993-ம் ஆண்டு முதல் இந்தியா- சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இருநாடுகளிடையேயான எல்லை விவகாரங்களை எப்படி கையாள்வது, எல்லையில் ராணுவத்தினர் எப்படி நடந்து கொள்வது என பல்வேறு அம்சங்கள் இந்த ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ளன.
கால்வன் மோதலால் சீர்குலைவு
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவும் சீர்குலைந்துவிட்டது. எல்லையில் சீனா பெருமளவு ராணுவத்தை குவித்ததன் மூலமே பிரச்சனை உருவானது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் நிகழ்ந்தது.
பேச்சுவார்த்தைகள் என்ன?
இது பொதுமக்களிடமும் சரி அரசியல் தளத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்கும் இடையே ரகசியமானவை. இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்படுவது என்பது சிக்கலானது.
எத்தனை காலத்துக்கு பேச்சுவார்த்தை?
இருநாடுகளின் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய புள்ளி எது என்பதை கண்டறிவதும் சவாலானதுதான். தற்போதைய பேச்சுவார்த்தைகள் எத்தனை காலத்துக்கு நடைபெறும் என்பதையும் தெரிவிக்கவும் இயலாது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.