மோடி அமைச்சரவையின் இரும்புப் பெண்.. மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்ற நிர்மலா சீதாராமன் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அத்துடன் அமைச்சரவையில் வரிசையில் 6-ஆவது முக்கிய அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
2014-இல் பொதுத் தேர்தலின் போது மறைந்த மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டது. இதையடுத்து கோவா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பாதுகாப்புத் துறையையும் சேர்த்து அருண் ஜேட்லி சில மாதங்களுக்கு கவனித்து வந்தார். இந்த நிலையில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நாட்டின் 15-வது பிரதமராக மோடி பதவியேற்றார்!
இதன்மூலம் நாட்டின் இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பதவியேற்ற பாஜக அரசில் நிர்மலாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் தாய்வழி தாத்தா தமிழகத்தின் முசிறியை சேர்ந்தவர். திருச்சியில் 18-8-1959ல் பிறந்தார் நிர்மலா சீதாராமன்.
இவரது தந்தை சீதாராமன் திருச்சி ரயில்வேயில் பணியாற்றினார். சேலம், சென்னை ஆகிய இடங்களுக்கு நிர்மலாவின் தந்தை சீதாராமன் இடம் மாறியதால் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்தது.
திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர் நிர்மலா சீதாராமன். பின்னர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை தொடர்ந்தார்.
ஆந்திராவை சேர்ந்த டாக்டர் பிரகலாத் பிரபாகர் என்பவரை மணந்து ஹைதராபாத்துக்கு சென்றார். அதன்பின் டெல்லியில் நிர்மலா சீதாராமன் குடும்பம் குடியேறியது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார் நிர்மலா சீதாராமன். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார். 2016-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், அப்பதவியை வகித்த முதல் தமிழ் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக பாதுகாப்புத் துறை ஏற்ற பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நிர்மலா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.