இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!
டெல்லி: இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவ தொடங்கியது. அப்போது உலகிலேயே கடுமையான லாக்டவுன் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டனர். இந்த நடைமுறைகள் அப்போது பல நிபுணர்களால் பாராட்டப்பட்டது. மேலும் நோயாளிகளின் தொடர்புகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டதாக பாராட்டுகள் குவிந்தன.
ஆனால் 2 மாதங்கள் கழித்து தற்போது மத்திய அரசு எடுத்த இந்த வியூகங்கள் பலன் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
ஹாங்காங்.. தேசிய பாதுகாப்பு சட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை.. எச்சரிக்கும் அமெரிக்கா
14 நாட்கள்
தினம் தினம் பாதிப்புகள் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகரித்து கொண்டே செல்வதும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்க கூடிய நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதும் இந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் நிபுணர்கள் கூறக்கூடிய அறிவுரைகளில் ஒன்று, பிற மாநிலங்களிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம் என்பதாகும். 14 நாட்களுக்குள் ஒரு நோயாளி, இன்னொரு நல்ல ஆரோக்கியமுள்ள மனிதருக்கு நோயை பரப்ப முடியும் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
11 நாள்தான் அதிகபட்சம்
இதனால்தான், நோயாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், வீடு அல்லது இன்ஸ்டிடியூஷனல் தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். ஆனால் சிங்கப்பூர் நாட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு என்பது இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு 11 நாட்களுக்குப் பிறகு பரவுவதற்கான வலிமையை இழந்து விடுகிறது என்று தெரிவிக்கிறது. ஒரு நபருக்கு வைரஸ் பாதிப்பு பன்னிரண்டாவது நாளும் இருந்தாலும் கூட, அந்த 12வது நாளில் அவரை தொடர்பு கொள்ளும் இன்னொரு ஆரோக்கியமான நபருக்கு அந்த கிருமி பரவாது. அதற்கு முன்பு தொடர்பில் இருந்தால் வேண்டுமானால் பரவக் கூடும் என்கிறது ஆய்வு, அந்த வைரஸ் வீரியம் அவ்வளவுதான் என்கிறது சிங்கப்பூர் ஆய்வு முடிவுகள்.
ஜெர்மனி ஆய்வு
ஜெர்மனி கடந்த மார்ச் மாதம் நடத்திய ஒரு சிறு ஆய்வும் இதே போன்ற ஒரு முடிவை தெரிவித்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி 8 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஆரோக்கியமான நபருக்கு அதை கடத்தும் தன்மையை இழந்து விடுவார். வைரஸ் வீரியம் வீழ்ச்சியடையும் என்று கூறியது அந்த ஆய்வு. தற்போது இந்தியாவில் லாக்டவுன் தளர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று முதல் துவங்கி உள்ளது. ஆனாலும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களும், பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விமான பயணிகள் மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு உள்ளாக வேண்டும் என்கிறார்கள். இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்வு என்பது அர்த்தமற்றதாக போய்விட்டது.
தனிமைப்படுத்துதல்
உதாரணத்துக்கு டெல்லியிலிருந்து பெங்களூர் நகருக்கு ஒருவர் விமானத்தில் சென்றால் அவர் அங்கு ஏழு நாட்கள் இன்ஸ்டிடியூஷனல் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார். அதாவது ஓட்டல் அல்லது வேறு எங்காவது தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படுவார். அதற்கான செலவினங்களை அவரே ஏற்க வேண்டும். ஓட்டல் ஒருநாள் வாடகை சுமார் 1,500 ரூபாய்க்கு மேலே இருக்கிறது என்கிறது கள நிலவரம். அதே நபர் டெல்லியிலிருந்து பிஹார் தலைநகர் பாட்னா சென்றால் அங்கு 14 நாட்கள் இன்ஸ்டிடியூஷனல் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும். அதற்கும் அவர் தான் பணம் செலுத்த வேண்டும். அவசர தேவை இருப்பதால்தான் ஒருவர் விமானத்தில் பயணிக்கிறார். ஆனால் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால் அந்த பயணத்தின் நோக்கம் தான் என்ன? இதற்கு பயணம் செய்யாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு மக்கள் வருவார்கள்.
அடுத்த விஷயம்
இன்னொரு விஷயம் மாற்றப்பட வேண்டியது என்றால், ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்ற ஐசிஎம்ஆர் முடிவு ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூட இந்த மருந்தை தான் நீண்ட காலமாக விளம்பரப்படுத்தி வருகிறார். ஆனால் உலக சுகாதார ஆய்வு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். இந்த மருந்தை பயன்படுத்தினால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். பார்வை கோளாறு முதல் இதய கோளாறு வரை பல்வேறு விஷயங்களை பாதிக்க கூடியது இந்த மருந்து என்கிறார்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்த நோயாளிகள் இறப்பு விகிதம் இரட்டிப்பாகி இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
மாத்திரை
இதயக் கோளாறு காரணமாகதான் அந்த நோயாளிகள் இறந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே, இந்த விஷயத்தை ஐசிஎம்ஆர் மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். மூன்றாவது மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயம், லாக்டவுன் நீடிக்கப்பட்டு இருந்தாலும் கூட அதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன என்பதுதான். சீன நாடு தான் முதலில் லாக்டவுன் என்பதை நடைமுறைப்படுத்தியது. அங்கிருந்துதான் பிற நாடுகளும் இந்த வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஆனால் சீனாவின் வியூகம் என்பது வேறு மாதிரி இருந்தது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுக்கப்பட்டன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில், லாக்டவுன் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
புலம் பெயர் தொழிலாளர்கள்
ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவை கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. தற்போது தொழிற்சாலைகளை துவங்குவது, ரயில் சேவை விமான சேவை போன்றவற்றுக்கு மத்திய அரசு இசைவு தெரிவித்து இருந்தாலும், பல மாநிலங்கள், அதற்கு சம்மதிக்கவில்லை. சீனா கடந்த இரண்டு மாதங்களாக படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தியது.
போர் வியூகம்
இந்தியாவில் மே மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு மிக வேகமாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் பிறகு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிதாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதில், முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதற்கு இந்த வியூகங்களின் மாற்றம் அல்லது வியூகங்களை செயல்படுத்த முடியாமல் சென்றது போன்றவையே காரணம். கொரோனா வைரசுக்கு எதிரான போர் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இந்த போரில் வெற்றி பெற வேண்டுமானால் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் வியூகத்தை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. மேலே சொன்ன மூன்று முக்கியமான வியூகங்களில் உடனடி மாறுதல்களை ஏற்படுத்துவது காலத்தின் தேவை என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.