சபாஷ்.. புலிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு.. நாட்டு மக்களுக்கு இது ரொம்பவே நல்ல செய்தி தெரியுமா!
டெல்லி: இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு ரொம்பவே முக்கியமான ஒன்று. ஏன் தெரியுமா? இந்த எண்ணிக்கை 2006ல் இருந்து ஒப்பிட்டால், இரு மடங்காக அதிகரித்து உள்ளது. கண்டிப்பாக இது சூப்பர் செய்திதான்.
புலிகளின் அதிகரிப்பு ஏன் மனிதர்களுக்கும் முக்கியமானது தெரியுமா? இதோ பாருங்கள்:
"புலி என்பது வேட்டையாடும் விலங்குகளில் உச்சபட்ச படிநிலையில் உள்ளது. இதன் வேட்டையாடும் பகுதி, நீண்ட தூரத்தை உள்ளடக்கியது. ஒரு புலியைப் பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் அமைப்பையும் அந்த குறிப்பிட்ட வன வாழ்விடத்தையும் பாதுகாப்பதாகும். புலிகளைப் பாதுகாப்பது காடுகள் மற்றும் நதிகளின் புனராக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன" என்று சொல்கிறார் ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான்.
கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு ஐ.எஃப்.எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய் கூறுகையில், "புலிகள் வனத்தின் முக்கிய ஆதாரம். மற்ற அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்படுவதை புலிகள்தான் உறுதி செய்கின்றன. புலிகள் நீண்ட தூர விலங்குகளாக இருப்பதால், வாழ்விடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. புலிகள் இறந்தால், பிற உயிரினங்களும் பாதிக்கப்படும்" என்றார்.
இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு திட்டம் ஒரு பெரிய சாதனை என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, 2018 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 2,226 புலிகள் இருந்ததை ஒப்பிட்டால் இது 33 சதவீதம் அதிகரிப்பாகும்.
2006 இல் நடத்தப்பட்ட முதல் புலிகள் கணக்கெடுப்பின்போது, நாடு முழுக்க மொத்தமே 1,411 புலிகள்தான் இருப்பதாக வெளியான தகவல் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்துதான், மத்திய அரசு புலிகளை காப்பாற்றும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த முன்னேற்றம் வரலாற்று சாதனை என்று தெரிவித்துள்ளார் மோடி.
"2022 க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு குறிக்கோள் தீட்டப்பட்டது. ஆனால் இந்தியா நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதை அடைந்துள்ளது" என்று மோடி மேலும் கூறினார்.
புதிய புலிகள், தொகை கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான, அதாவது 526 புலிகள் உள்ளன. கர்நாடகா மிக நெருக்கமான இடத்தில் உள்ளது. அங்கு 524 புலிகளும், உத்தரகண்ட்டில் 442 புலிகளும் உள்ளன. தமிழகத்தில் 250 புலிகள் உள்ளன.