கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் பலம் கண்டு ஓடிவரும் தெற்காசிய நாடுகள் - விழி பிதுங்கும் சீனா
டெல்லி: 12 மில்லியன் முதல் 20 மில்லியன் அளவிலான மருந்துகளை அண்டை நாடுகளுக்கு வழங்க இந்தியா பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் பொருளாதார ரீதியில் இந்தியாவும், சீனாவும் பல ஆண்டுகளாக மல்லுக்கட்டி வருகின்றன. இதில், சீனா ஒருபடி மேல் உள்ளது. இந்தியாவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சரியான தருணத்திற்காக காத்திருந்தது. தற்போது அதற்கான பிரகாசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை அதிகளவில் தயாரிக்கும் இந்தியா, அதனை இலவசமாக தனது அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த சில வாரங்களில், இந்தியா மில்லியன் கணக்கான கோவிட் -19 தடுப்பூசிகளை தெற்காசிய நாடுகளுக்கு வழங்கும் என்று அரசு சார்பில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடுகள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளன.
உலகின் அதிக அளவில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த அஸ்ட்ராசெனெகாவின் தடுப்பூசி, மாலத்தீவு, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு வந்து சேர தொடங்கியுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடனான நட்பை வளர்ப்பதற்கு, இந்தியா தனது மருந்து உற்பத்தி எனும் பலத்தை பயன்படுத்துவதால், மியான்மரும், சீஷெல்ஸும் இந்தியாவிடமிருந்து இலவசமாக மருந்துகளை வாங்க ஆவலோடு உள்ளன.
"தடுப்பூசியை இலவசமாக வழங்குவதன் மூலம் இந்திய அரசு தனது நல்லெண்ணத்தைக் காட்டியுள்ளது. இது மக்களுக்கான சேவையாகும். கோவிட் -19 நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்" என்று நேபாள சுகாதாரத் துறை அமைச்சர் ஹிருதேஷ் திரிபாதி தெரிவித்தார்.
இந்தியாவுடனான எல்லை பிரச்சனையால் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா குறித்த நேபாள நாட்டின் இந்த கருத்து சீனாவுக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், நேபாளத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்க நேபாளத்திற்கு உதவி செய்வதாக உறுதியளித்த சீனா, அதன் சினோபார்ம் மருந்துகளை அனுப்ப நேபாள அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறது.
ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாள மருந்து நிர்வாகத் துறையின் செய்தித் தொடர்பாளர் சந்தோஷ் கே.சி. "நாங்கள் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு கூடுதல் ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு சீனாவிடம் கேட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தங்களிடம் மருந்து வாங்குவார்களா என்ற சந்தேகத்தில் சீனா உள்ளது.
மல்லுக்கட்டும் சீனா
சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் தயாரித்த தடுப்பூசிகளில் 110,000 டோஸ் மருந்துகளை வங்கதேசம் வாங்குவதாக இருந்தது. ஆனால் தடுப்பூசியின் தயாரிப்பு பணி செலவுகளுக்கு பங்களிக்க வங்கதேசம் மறுத்துவிட்டது.
அதற்கு பதிலாக அவசரகால பொருட்களை வாங்க இந்தியா பக்கம் திரும்பியுள்ளது வங்கதேசம். இதன் விளைவாக, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 2 மில்லியன் டோஸ்களை இந்தியாவிடமிருந்து நட்பு ரீதியிலான பரிசாக பெறுகிறது வங்கதேசம்.
"இந்தியா மாற்றங்களை ஏற்படுத்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உருவாக்குகிறது. இதை சாதாரண குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில் சேமித்து கொண்டு செல்ல முடியும். வங்கதேசம் போன்ற நாடுகளில் அந்த வசதி உள்ளது" என்று வங்கதேச சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளில் சீனா முதலீடு செய்யும் வேகத்தை ஈடுகட்ட இந்தியா பல ஆண்டுகளாக போராடி வருகிறது, அங்கு துறைமுகங்கள், சாலைகள் மற்றும் மின் நிலையங்களை சீனா உருவாக்கி வருகிறது.
ஆனால் இந்த நாடுகளில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிக அளவில் தேவைப்படுவதால், அவை இந்தியாவிடம் சரண்டர் ஆகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், அந்த நாடுகளில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும் என நம்பப்படுகிறது.
அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் 12 மில்லியன் முதல் 20 மில்லியன் அளவிலான மருந்துகளை தனது அண்டை நாடுகளுக்கு வழங்க இந்தியா பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து முன்னாள் இந்திய தூதர் ராஜீவ் பாட்டியா கூறுகையில், "அறிவியல் மற்றும் மருந்து தயாரிப்பில் நமது பலமாக இருக்கிறோம். இது நாம் மேலும் பிரகாசிக்க வேண்டிய தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் அரை மில்லியன் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக உறுதிமொழி அளித்த சீனாவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.