காஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி
டெல்லி: தாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனையில் உதவ தயாராக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை இரு தரப்பு பிரச்சனை, நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம் என்று திட்டவட்டமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்கு முன்னதாக செவ்வாய் கிழமை அன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்டுக்கு இடையே பஞ்சாயத்து செய்து வைக்க தயாராக இருப்பதாக மீண்டும் கூறினார்.
டிரம்ப் அறிவிப்பு
அப்போது அவர் கூறுகையில், "நாங்கள் காஷ்மீரின் நிலைமை பற்றி விவாதிப்போம். இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதி காப்போம். நாங்கள் சில எல்லைகளில் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் காஷ்மீரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்களால் உதவ முடிந்தால், நிச்சயம் உதவுவோம். அதற்கான வாய்ப்பை நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தை மிக நெருக்கமாக தொடர்ந்து வருகிறோம்" என்றார்.
காஷ்மீர் பிரச்சனை
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் மூன்றாவது முறையாக சந்தித்துக்கொண்டனர். அப்போது பாதுகாப்பு விஷயங்கள், ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகள், அமெரிக்க-ஈரான் மோதல்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதித்தனர்.
டிரம்ப் தலையிட
பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையையும் அப்போது எழுப்பினார், ஆகஸ்ட் 5 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக எடுத்துரைத்து, டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
நாங்களே பேசுவோம்
இதனிடையே இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் பதில்அளித்த இந்திய வெளியறவுத்துறை காஷ்மீர் பிரச்சனை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு பிரச்சனை, இது இரு தரப்பு ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் இது தொடர்பாக கூறுகையில், தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெற வேண்டுமெனில் முதலில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தது.