அணு ஆயுதம் தடை சட்டத்தை... நாங்கள் ஆதரிக்கவில்லை.. கட்டுப்படவும் மாட்டோம்... இந்தியா திட்டவட்டம்
டெல்லி: ஐநாவின் அணு ஆயுத தடை சட்டத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இச்சட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் கட்டுப்படாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மீது அமெரிக்கா ஆயுதங்களைப் பயன்படுத்தியதன் வடுவே இன்னும் ஆறவில்லை. அதன் பின்னர் எந்த ஒரு நாடும் எதிர் நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்தவில்லை.
இருப்பினும்கூட, பல நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றும் இருப்பினும், எதிரி நாடு அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவே அணு ஆயுதங்களை வைத்துள்ளோம் என்பதும் இந்த நாடுகளின் வாதம்.
அணு ஆயுத தடை சட்டம்
இந்நிலையில், அணு ஆயுதங்களற்ற உலகைப் படைக்கும் முன்னெடுப்பாகக் கடந்த 2017ஆம் ஆண்டு அணு ஆயுத தடை ஒப்பந்தம் ஐநா சபையில் கொண்டு வரப்பட்டது. அணு ஆயுத சோதனை, தயாரிப்பு, இருப்பு வைத்தல், ஏற்றுமதி ஆகியவை இதில் கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டுவரக் குறைந்தபட்சம் 50 நாடுகளின் ஆதரவு தேவைப்பட்டது.
அமலுக்கு வந்தது
அதன்படி பிரேசில் இதில் முதல் நாடாகக் கையெழுத்திட்டது. அதன் பின் இந்தோனேசியா, ஹாண்டுராஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதையடுத்து அணு ஆயுத தடை சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படும் ஒன்பது நாடுகளில் ஒன்றுகூட இதற்கு ஆதரவளிக்கவில்லை. அதேபோல நேட்டோ கூட்டணியைச் சேர்ந்த 30 நாடுகளும் இதை ஆதரிக்கவில்லை.
இந்தியா கட்டுப்படாது
ஐநாவின் அணு ஆயுத தடை சட்டத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இச்சட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் கட்டுப்படாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்தது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சர்வதே அளவில் பாகுபாடற்ற முறையில் நடக்கும் அணு ஆயுதக் குறைப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அணு ஆயுத தடை சட்டத்தை பொருத்தவரை, இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை.
இது சரியான அணுகுமுறை இல்லை
மேலும், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனவே, இதிலுள்ள எந்த சட்டத்திற்கும் வரும் காலங்களில் இந்தியா கட்டுப்படாது. இந்தச் சட்டம் சர்வதேச அளவில் எந்தவொரு புதிய விதிமுறைகளையும் விதிக்கவில்லை. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பது இந்தியாவின் குறிக்கோள். இதை படிப்படியான செயல்முறை மூலமே அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.