கலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி
டெல்லி: இந்தியா- நேபாளம்- திபெத் எல்லையில் இருக்கும் கலாபானி எங்களுக்கே சொந்தமானது; அங்கிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என நேபாள பிரதமர் ஒலி வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி அக்டோபர் 31-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து மத்திய அரசு புதிய வரைபடங்களை வெளியிட்டது.
அதில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்த அத்தனை காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் உத்தர்காண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம்- திபெத் மூன்றும் சந்திக்கும் கலாபானி இந்திய பகுதிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நேபாளத்தின் புகார்.
இதற்கு நேபாளம் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்வதாக மத்திய அரசும் கூறியுள்ளது. ஆனால் நேபாளத்தில் கலாபானியை விட்டுத்தரக் கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான நேபாள யுவ சங்கத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் கே.பி. ஒலி, எங்கள் நாட்டின் ஒரு அங்குலம் இடத்தைக் கூட எந்த ஒருநாடும் ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம். கலாபானியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்.
எங்கள் நிலத்தில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். அதன்பின்னர்தான் இது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையே நடைபெறும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.