காஷ்மீர் பற்றி ஐ.நா.வில் பிரச்சினை கிளப்பிய சீனா.. இந்தியா பதிலடி
டெல்லி: ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரங்கள் தொடர்பாக சீனா பிரச்சனை கிளப்பியதற்கு, இந்தியா இன்று தனது பதிலடியை கொடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, "ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இரண்டுமே, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்று நடக்க வேண்டும். ஏற்கனவே ஜம்மு காஷ்மீர், லடாக் போன்றவற்றில் இருந்த நிலையில், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக டெல்லியில் இன்று, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்.
கீழடியில் அருங்காட்சியம்- பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன்
அவ்விரு பிராந்தியங்களிலும் இந்திய அரசு எடுத்த முடிவுகள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்தான். ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் லடாக் ஆகிய பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை சீன நாடு நன்கு அறியும். எனவே பிற நாடுகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் அதன் எல்லை சுதந்திரத்தில் தலையிட கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ரவீஸ்குமார் தெரிவித்தார்.