பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்
டெல்லி: பிரான்ஸில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரான்ஸ் அதிபருக்கு எதிராக கடும் விமர்சனம் செய்த துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடம் காட்டி பேச்சு , கருத்து சுதந்திரம் குறித்து விவாதம் நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பேட்டி (47) என்பவர் கடந்த 16-ஆம் தேதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது 18 வயது மாணவர் ஒருவர் அந்த ஆசிரியரின் தலையை துண்டித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நபரை போலீஸாரே சுட்டுக் கொன்றனர். அந்த நபர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என கூறப்பட்டது.
எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு
இமானுவேல் மேக்ரான்
இந்த தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மேக்ரானுக்கு எதிராக சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய அணுகுமுறை
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில் இஸ்லாமிய அணுகுமுறை குறித்த தனது மனநிலையை பிரான்ஸ் அதிபர் பரிசோதிக்க வேண்டும் என்றார். மேலும் பிரான்ஸ் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.
கார்ட்டூன்கள்
அது போல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகளை மேக்ரான் ஊக்குவிக்கிறார். முஸ்லீம்களை சீண்டுகிறார். ஈரான், சவுதி ஆகிய நாடுகள் கார்ட்டூன்களை கண்டித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
தனிநபர் தாக்குதல்
இந்த நிலையில் மேக்ரான் மீது விமர்சனம் செய்த துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை இந்தியா கண்டித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிரான தனிநபர் தாக்குதல்களை ஏற்க முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அறிக்கை
அது போல் பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் மீதான தீவிரவாத தாக்குதலையும் கண்டிக்கிறோம். அந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு பிரான்ஸ் மக்களுக்கும் இந்தியா சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் நவம்பர் 4-வரை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிரிங்களா திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
12 பேர் கொலை
கடந்த 2015-ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பத்திரிகை ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.