கோவிஷீல்டு தடுப்பூசி... ஒரு டோஸின் விலை ஆயிரம் ரூபாய்... வெளிநாடுகளுக்கு தொடங்கியது ஏற்றுமதி
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் வணிக ரீதியான ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், முதல்கட்டமாகப் பிரேசில் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், நட்பு ரீதியாகப் பூட்டான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா இலவசமாக ஏற்றுமதி செய்தது. இந்தியாவிலுள்ள முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதால் தடுப்பூசிகளின் வணிக ரீதியான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், வணிக ரீதியான ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாகவும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை வணிக ரீதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித் திறன் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவருக்கும் பயன்படுத்தப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த முடிவ எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலில் அண்டை நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி தற்போது முதல்கட்டமாகப் பிரேசில் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சீரம் நிறுவனத்தின் ஆதார் பூனவல்லா, இந்திய அரசுக்கு முதல்கட்டமாக சில லட்சம் டோஸ்கள் 200 ரூபாய்க்கும், வெளிச் சந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 86.99 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கி இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.