ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. 10ஆவது முறையாகத் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள், தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் என மொத்தம் 15 நாடுகள் உள்ளன. 2021-22ஆம் ஆண்டிற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாத தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
முதல் பணி நாளான திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்கவுள்ளார்.
இது குறித்து திருமூர்த்தி கூறுகையில், "கடல் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். இது தொடர்பாக உயர்மட்ட கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் பல முக்கிய கூட்டங்களை நடத்தவும் இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு இந்தியா ஏற்பது இது 10ஆவது முறையாகும். ஏற்கனவே, ஜூன் 1950, செப்டம்பர் 1967, டிசம்பர் 1972, அக்டோபர் 1977, பிப்ரவரி 1985, அக்டோபர் 1991, டிசம்பர் 1992, ஆகஸ்ட் 2011 மற்றும் நவம்பர் 2012 காலகட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா இருந்துள்ளது.