டிசம்பருக்குள் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ் ரெடி.. மார்ச்சில் வினியோகம்.. சீரம் அதிகாரி
டெல்லி: டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 200 முதல் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாராக இருக்கும் என்று கூறியுள்ளார், சீரம் இன்ஸ்டிடியூட்டின் (எஸ்ஐஐ) நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ்.
2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஃபைனல் பரிசோதனை செய்யப்பட்ட தடுப்பூசி வினியோகத்திற்கு கிடைக்கும் என்றும் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ஹீல் அறக்கட்டளை ஏற்பாடு செய்த பார்மா எக்ஸலன்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று சுரேஷ் ஜாதவ் பேசுகையில் கூறியதாவது:
தடுப்பூசி தயாரிப்பு
தடுப்பூசி தயாரிப்பு சோதனை சில காலம் நிறுத்தப்பட்டது. எனவே மேலும் மூன்று வாரங்கள் தயாரிப்பு பணி நீட்டிக்கப்பட்டது. ஏனெனில் சில மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள் மூன்றாம் கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பற்றி சில விளக்கம் பெற விரும்பினர். எனவே, சீரம் இன்ஸ்ட்டியூட் அனைத்து சோதனைகள் விவரத்தையும், டிசம்பர் இறுதிக்குள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு விவரம் அளிக்கப்படும்.
மருந்து கட்டுப்பாட்டாளர்
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் திருப்தி அடைந்தால், ஒரு மாத காலத்திற்குள் அவசரகால பயன்பாட்டு உரிமத்தை வழங்கலாம், அல்லது சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தையும் வழங்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
டிசம்பருக்குள் பெரும் உற்பத்தி
டிசம்பர் மாதத்திற்குள், சீரம் நிறுவனம் 200 முதல் 300 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸை தயார் நிலையில் வைத்திருக்கும். அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதும், மாதத்திற்கு 60 முதல் 70 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும்.
கண்காணிப்பு
இப்போது எல்லாம் சீராக நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் கோவிட் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பார்க்க, தொடர்ந்து தன்னார்வலர்களை 2 முதல் 3 ஆண்டுகள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.