கேம் ஸ்டார்ட்- சீனாவுடன் நெருங்கிய ராஜபக்சேவுக்கு செக்- தமிழர் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை!
டெல்லி: சீனாவுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கம் காட்டுவதால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா மீண்டும் தலையிட தொடங்கி உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகள் மீதான நமது பிடி 1990களுக்குப் பின்னர் கைவிட்டுப் போனது. குறிப்பாக இலங்கையை சீனா கபளீகரம் செய்து கொண்டே இருக்கிறது.
தென்னிலங்கை பகுதியை அதிபராக இருந்த ராஜபக்சே சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். சீனாவின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கும் வந்து போயின. இதனால் இலங்கை மீது கடும் கோபத்தை இந்தியா அப்போது காட்டியது.
ப.சிதம்பரத்துக்கு பாக். உளவு அமைப்பு, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம்.. காஷ்மீர் பாஜக தலைவர் பகீர்
ராஜபக்சே குடும்ப ஆட்சி
இதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா அதிபரானார். அப்போது, தம்மை இந்தியாவே தோற்கடித்தது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் மகிந்த ராஜபக்சே. மைத்திரிபால சிறிசேனாவை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சே, இலங்கையின் அதிபராகவும் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் இப்போது உள்ளனர்.
சீனாவுடன் உறவு
ராஜபக்சே சகோதரர்கள் தொடக்கத்தில் இந்தியாவுக்கே முன்னுரிமை என பேசிவந்தனர். ஆனால் நடைமுறையில் வழக்கம் போல சீனா மீதான விசுவாசத்தை காட்டி வருகின்றனர். சீனாவிடம் இருந்து நிதி உதவி பெறுவதும் சீனாவுடன் நெருக்கமான உறவை பேணுவதுமாக ராஜபக்சே சகோதரர்களின் போக்கு மாறிவிட்டது.
ராஜபக்சே-மோடி பேச்சுவார்த்தை
அண்மையில் பிரதமர் மோடி, மகிந்த ராஜபக்சேவுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பேசிய விவரங்கள் என்ன என்பதே மறந்து போய்விட்டது என கிண்டலடித்திருந்தார் மகிந்த ராஜபக்சே. இந்தியாவிடம் இருந்து விலகி சீனாவிடம் சரணடைந்துவரும் ராஜபக்சே சகோதரர்களுக்கு இப்போது மத்திய அரசு செக் வைக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சனை- தலையிடும் இந்தியா
இதன் முதல் கட்டமாக ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அங்குள்ள தமிழர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இந்த பேச்சுவார்த்தைக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்கிற விவரம் விரைவில் வெளியிடப்படுமாம். இந்தியாவின் இந்த பதிலடி நடவடிக்கை ராஜபக்சே சகோதரர்களை அதிரவைத்துள்ளதாம்.