கொரோனா தடுப்பு மருந்தில் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் உலக நாடுகள் - காரணம் என்ன?
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் பல நாடுகளிலும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்தின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளும்கூட இதனால் பாதிக்கப்பட்டிருந்த போது நம் நாட்டின் மருந்து நிறுவனங்கள் உலகிற்குத் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து எவ்வித சிக்கலுமின்றி விநியோகித்தன.
இப்போது கொரோனா பரவலைச் சமாளிக்கத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்க நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உலகம் மீண்டும் தற்போது இந்தியாவைப் பார்க்கிறது.
இந்தியாவில் உற்பத்தி
இந்திய மருந்து நிறுவனங்கள் குறித்து இந்திய மருந்து கூட்டணி (ஐபிஏ) பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் கூறுகையில், "உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகெங்கிலும் தடுப்பூசிகளை விநியோகிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது" என்றார்.
இந்திய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து
இந்திய நிறுவனங்களான ஜைடஸ், பாரத் பயோடெக் மற்றும் ஜென்னோவா ஆகியவை சொந்தமாக கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. அதேநேரம் சீரம், டாக்டர் ரெட்டிஸ், பயோலாஜிக்கல் இ போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து
தற்போது, பாரத் பயோடெக், சீரம் மற்றும் ஃபைசர் ஆகிய மூன்று கொரோனா தடுப்பூசிகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தீவிரமாகப் பரிசோதனை செய்து வருகிறது. குறைந்தபட்சம் இவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பு மருந்திற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி முதலே இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50% இங்கே... 50% வெளியே...
இது குறித்து, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, "இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளில் 50% இந்தியாவிலேயே பயன்படுத்தப்படும். மீதமிருக்கும் 50% மட்டுமே மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படும்.
இப்போதுவரை நாங்கள் தடுப்பு மருந்தின் 50 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ளோம். இப்போது மாதத்திற்கு 60-70 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறோம், இது பிப்ரவரி மாதம் 100 மில்லியன் டோஸ்களாக அதிகப்படுத்தப்படும்.
கொரோனா தடுப்பு மருந்தின் விலை
நாங்கள் உற்பத்தி செய்யும் தடுப்பு மருந்தின் விலை மிகக் குறைவாகவே இருக்கும். அதிலும் மத்திய அரசு எங்களிடம் அதிகளவிலான தடுப்பு மருந்துகளை வாங்கும் என்பதால் இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தின் விலை 3 முதல் 4 டாலராகவே இருக்கும், இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மட்டுமே முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்குத் தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும். மற்றவர்களுக்கு 6 முதல் 8 டாலருக்கு தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும்" என்றார்.
பில் கேட்ஸ்
கடந்த செப்டம்பர் மாதம், உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கோவிட் -19 தடுப்பூசியை தயாரிப்பதிலும் அதைப் பிற வளரும் நாடுகளுக்கு வழங்குவதிலும் ஒரு முக்கிய பங்கை இந்தியா வகிக்கும் என்று கூறினார்.