தைவானுக்கு இந்தியா அனுப்பிய "சீனியர்" அதிகாரி.. தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்.. செம காரணம்!
டெல்லி: தைவான் நாட்டிற்கு தற்போது சீனியர் அதிகாரி ஒருவரை இந்தியா தூதரக அதிகாரியாக நியமிக்க உள்ளது. முதலீடு, பாதுகாப்பு தொடங்கி பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியா- தைவான் இடையே பெரிய அளவில் இத்தனை நாட்கள் தொடர்பும், நட்பும் இருந்தது இல்லை. குடியரசு சீனாவில் ஒரு அங்கமாக இருப்பதால், தைவான் எப்போதும் இந்தியாவுடன் பெரிய அளவில் உறவு கொண்டது இல்லை.
பெரும்பாலும் சீனா வழியாகவே இந்தியா தைவானுடன் உறவு கொண்டு இருக்கிறது. ஆனால் தற்போது சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில், இந்தியா தைவானுக்கு சீனியர் அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய இருக்கிறது.
கொரோனா- டெல்லி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலையில் சர்ச்சை
யார் இவர்
அதன்படி அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கவுரங்கலால் தாஸ் தற்போது தைவானுக்கு அனுப்பப்பட உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தைவான் -இந்தியா உறவை மேம்படுத்தும் வகையில் இந்த அதிகாரியை இந்தியா அனுப்ப உள்ளது. இத்தனை நாட்கள் சீனா காரணமாக இந்தியா தைவான் உடன் நெருக்கம் காட்டாமல் இருந்தது. ஆனால் இப்போது அதே சீனாவை அடக்கும் வகையில் தைவான் உடன் இந்தியா நெருக்கம் காட்ட உள்ளது.
யாரை மாற்றுகிறார்
தைவானில் தற்போது இருக்கும் இந்தியா - தைபே அசோசியேஷன்தான் இரண்டு நாட்டுக்குமான தொடர்பாக, தூதரகமாக பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது இயக்குனராக இருக்கும் ஸ்ரீதரன் மதுசூதனன் மாற்றப்பட்டு கவுரங்கலால் தாஸ் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளார். அதேபோல் தைவானும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் வகையில் பவுசான் கெர்ரை தங்கள் நாட்டு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.
திட்டம்
தைவானுடன் கடந்த சில தினங்கள் முன்புதான் பாஜக எம்பி மீனாட்சி லேகி மற்றும் ராகுல் கச்வான் ஆகியோர் ஆலோசனை செய்தனர். தைவானுடன் முறையாக உறவை மேம்படுத்தி, அந்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, பாதுகாப்பு ரீதியாக தைவானை இந்தியாவுடன் நெருங்க செய்வதுதான் இந்தியாவின் நோக்கம் என்கிறார்கள். கவுரங்கலால் தாஸ் 1999 ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி ஆவார். இவர் நன்றாக மாண்டரின் பேச கூடியவர். 2001-2004 வரை சீனாவின் இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
சீன தைவான்
இதனால் இவருக்கு சீனா தைவான் அரசியல் நன்றாக தெரியும். அமெரிக்காவில் இவர் பணியாற்றி முக்கிய வெளியுறவு உறவுகளை மேம்படுத்தி உள்ளார். அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்திலும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அலுவலகத்திலும் இவர் பணியாற்றி உள்ளார். இதனால் இவரின் தைவான் வருகைப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று கூறுகிறார்கள்.
தமிழகம்
இதற்கு பின் தமிழகத்திற்கு பெரிய அளவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். அதன்படி தைவானில் இருக்கும் உதிரி பாக தொழிற்சாலைகள் வரிசையாக தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. சீனாவில் இருக்கும் தைவான் உதிரி பாக தொழிற்சாலைகள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும் தைவானின் பெரிய உதிரி பாக நிறுவனமான ஃபாக்சான் நிறுவனமும் தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்க உள்ளது. சென்னையில் ரூ 7500 கோடியை இவர்கள் முதலீடு செய்ய உள்ளனர் .
தைவான் சென்னை
தைவானில் இருக்கும் முக்கிய நிறுவனங்கள் எல்லாம் சென்னையை குறி வைத்து இருக்கிறது . அதிலும் தைவானில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து சென்னை வர பார்க்கிறது. இதனால்தான் தற்போது அமெரிக்கா, சீனா, தைவான் அரசியல் தெரிந்த ஒருவரை அங்கே இந்தியா அதிகாரியாக நியமிக்க உள்ளது. இவரின் வருகை காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.