கொரோனா ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு...கனடாவுக்கு இந்தியா பதிலடி!
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அடுத்த வாரம் கனடா சார்பில் நடைபெறும் கொரோனா ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா அரசிடம் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எந்த எந்நாடுகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் கனடா முதன் முறையாக வாய் திறந்தது.இதுகுறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி, கவலை அளிக்கிறது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க, கனடா எப்போதும் துணை நிற்கும்' என்றார்..
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்தியா, 'உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என தெரிவித்தது.மேலும் இந்தியாவுக்கான கனடா துாதர் நதிர் படேலுக்கு, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதுடன், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரித்து இருந்தது.ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் கனடா அவர்களுக்கு துணை நிற்கும்' என மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக கூறி உள்ளதால் இந்தியா கடும் கோபம் அடைந்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு கொரோனா வாக்சின் கட்டாயமில்லை... ஜோபிடன் அதிரடி!
இதன் காரணமாக அடுத்த வாரம் கனடா நடத்தும் கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இந்தியா முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. கனடாவில் டிசம்பர் 7-ம் தேதி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தலைமையில் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சில திட்டமிட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா அரசிடம் தெரிவித்து உள்ளதாக டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் கடந்த மாதம் கனடாவில் கொரோனா தொற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்சங்கர், இது தொடர்பாக சுட்டுரையில் பதிவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.