இந்தியாவுக்கு எதிரான பாக். தாக்குதலில் அமெரிக்காவின் எப் 16 போர் விமானம்.. வெளியான புதிய தகவல்
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், எப்-16 போர் விமானத்தை பயன்படுத்தியுள்ளதை இந்தியா டுடே டிவி சேனல் அம்பலப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பாலகோடு பகுதிக்குள் இந்திய விமானப்படை புகுந்து தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பிப்ரவரி 27ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டு போர் விமானங்கள் புகுந்து ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டன. அப்போது இந்திய விமானப்படை அதற்கு பதிலடி கொடுத்து, விரட்டியடித்தது.
இந்த முயற்சியின்போது, விங் கமாண்டர் அபிநந்தன் இயக்கிய மிக்-21 வகை விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. முன்னதாக அபிநந்தன், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.
அமெரிக்கா விமானம்
எப் 16 என்பது அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போர் விமானம். இந்தியா மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்த கூடாது என அப்போதே அமெரிக்கா நிபந்தனை விதித்துதான், பாகிஸ்தானுக்கு எப் 16 விமானங்களை வழங்கியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவிடம் குட்டு வாங்குவதை தவிர்க்க, எப் 16 விமானத்தை தாங்கள் பயன்படுத்வில்லை என பாகிஸ்தான் பிரதமர் முதல் அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் வரை மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தியா வலியுறுத்தல்
ஆனால், எப் 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை வெளியிட்டது. விமானத்தின் உபகரணங்களை இந்திய முப்படை தளபதிகள் கூட்டு பிரஸ்மீட்டில் வெளியிட்டனர். இருப்பினும் பாகிஸ்தான், அதை மறுத்து வந்தது. இந்த நிலையில், இந்தியா டுடே நடத்தியுள்ள புலனாய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறியுள்ளதாவது:
இரு பைலட்கள் பெயர்கள்
பாகிஸ்தான் எல்லைக்குள் 2 இந்திய விமானம் சுடப்பட்டதாகவும், அதில் ஈடுபட்ட பாகிஸ்தான் பைலட்டுகள் பெயர்கள், ஹசன் சித்திக்கி மற்றும், விங் கமாண்டர் நோமன் அலிகான் என்றும், பாகிஸ்தான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அறிவித்திருந்தார். அதில், விங் கமாண்டர் நோமன் அலிகான் யார் என்பது பற்றி நாங்கள் ஆய்வு செய்தோம்.
அமெரிக்க கூட்டு பயிற்சி
2010ம் ஆண்டு, ஜூலையில் நோமன் அலிகான், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற, கூட்டு ராணுவ பயிற்சியின்போது, எப் 16 விமானத்தை இயக்கியுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. இதன்பிறகு, வேறு எந்த விமானத்தையும் அவர் இயக்கவில்லை. 2018 மார்ச் மாதம், மீண்டும் எப்-16 விமானத்தை நோமன் அலிகான் இயக்கிய படம் கிடைத்துள்ளது. அப்போது ராணுவ தளபதியுடன் அவர் உள்ளார்.
அம்பலமான பாகிஸ்தான் பொய்
இந்திய விமானத்தை வீழ்த்திய பைலட் விங் கமாண்டர் நோமன் அலிகான் என பாகிஸ்தானே கூறியுள்ளது. இப்போது பைலட் பின்னணி கிடைத்துவிட்டதால், சந்தேகத்திற்கு இடமின்றி, எப் 16 விமானத்தை இந்தியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு, பயன்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு அந்த புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது. இதற்கான புகைப்படங்கள், வீடியோக்களையும், 'இந்தியா டுடே' வெளியிட்டுள்ளது.
பயிற்சி தேவை
போர் விமானங்கள் கார் ஓட்டுவதை போல சுலபமானது கிடையாது. ஒருநாள் மெர்சிடஸ் பென்ஸ் மற்றொரு நாள் பிஎம்டபிள்யூ கார்களை ஓட்டுவதை போன்ற வித்தை கிடையாது. ஒரு வகை போர் விமானத்தை இயக்கும் பைலட் மற்றொரு வகை விமானத்தை இயக்க பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி மாற்ற வேண்டுமானால் நீண்ட பயிற்சி தேவைப்படும். கடைசியாக2018ம் ஆண்டு, மார்ச் மாதம், எப் 16 விமானத்தை இயக்கிய நோமன் அலிகான், வேறு விமானத்தை பயன்படுத்தி இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க, வாய்ப்பில்லை என்கிறார்கள் பாதுகாப்புத்துறை நிபுணர்கள்.