மலேசிய பாமாயிலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த இந்தியா.. மலேசியாவுக்கு பலத்த அடி
டெல்லி: காஷ்மீர் நடவடிக்கை, சிஏஏவுக்கு எதிராக மலேசிய பிரதமர் விமர்சித்ததை தொடர்ந்து மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடை செய்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த தடை மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் நீண்ட காலமாக நல்ல நட்பு உறவு இருந்து வந்தது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது மலேசிய பிரதமர் மகதீர் பின் முகமது பேசிய பேச்சால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.
அத்துடன் சிஏஏவுக்கு எதிராகவும் மலேசிய பிரதமர் கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தால் மலேசியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.
போகி கொண்டாட்டம்... சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை.. வாகன ஓட்டிகள் அவதி
இந்திய இறக்குமதி
இந்நிலையில் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய அதிகாரப்பூர்வ மற்ற வகையில் மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக சொல்கிறார்கள். இதன் காரணமாக வர்த்தகர்கள் யாரும் மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்யவில்லை. உரிமம் உள்ளவர்கள் மட்டுமே பாமாயிலை இறக்குமதி செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பாமாயிலை அதிக அளவு இறக்குமதி செய்வது இந்தியா தான். மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.
பாமாயில் இறக்குமதி
ஆண்டு தோறும் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இருந்து 9 மில்லியன் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் முந்தைய நிதியாண்டை விட மலேசிய பாமாயில் இறக்குமதி 18.32 சதவீதம் சரிந்துள்ளது. மலேசிய பாமாயிலை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். அப்படியே இறக்குமதி செய்தாலும் துறைமுகத்தில் இருந்து சரக்கை கொண்டுவருவது கடினம் என்கிறார்கள்.
இந்தியாவில் தட்டுப்பாடு
மலேசியாவைவிட 10 டாலர் கூடுதலாக இருந்தாலும் ( மலேசியா 800 டாலர்) இந்தோனேஷியா பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறார்கள். இதனால் இந்தியாவில் பாமாயில் விலை உயரும் என்று கூறப்படுகிறது. மானிய விலையில் அரசு வழங்கும் பாமாயிலுக்கு அதிக கிராக்கி ஏற்படும் என்கிறார்கள்.
கவலைக்குரிய விஷயம்
இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியில் 4.5 சதவீதமாக உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் என்கிறார்கள். இந்தியா கைவிட்டாலும், மலேசியாவால் பாமாயிலுக்கான புதிய சந்தையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள்.