மாபெரும் சாதனை.. ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு சாதித்தது எப்படி
டெல்லி: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை? மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படுவதற்குள் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
69 லட்சம் பேர்
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் நாட்டில் 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று 30 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இன்று 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, ஒரே நாளில் 42.65 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதே சாதனையாக இருந்தது.
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கைகள் இன்று நடைமுறைக்கு வரும் நிலையில், முதல் நாளே 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய தடுப்பூசி கொள்கைப்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேக்சின்களில் 25% தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படும். மீதமுள்ள 75% தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். இந்தப் புதிய கொள்கைகள் காரணமாகவே தடுப்பூசி பணிகள் வேகமெடுத்துள்ளது.
பிரதமர் ட்வீட்
அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடத் தடுப்பூசி மட்டுமே வலிமையான ஆயுதம். தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தக் கடுமையாக உழைக்கும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மாநில அரசுகள்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாநிலங்களும் வேகப்படுத்தி வருகிறது. நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் தான் தடுப்பூசி பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது, அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தி தினசரி மூன்று லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.