நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை
டெல்லி: கோவை ஐஎஸ் தீவிரவாதிகள் கொடுத்த தகவலை வைத்து மத்திய அரசு இலங்கையை எச்சரித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இலங்கை செயல்படாமல் கோட்டைவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 359 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் பயங்கரவாத பயிற்சிபெற்ற 160 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினரின் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி... பகீர் தகவல்
கோவையில் ஐஎஸ்
இதனிடையே கோவையில் இந்து மத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
தீவிரவாதியுடன் தொடர்பு
அப்போது அவர்களுக்கு இலங்கை தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதி ஜஹரான் ஹஸிமுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஹஸிமின் பிரச்சாரங்கள் அடங்கிய வீடியோக்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.
எச்சரித்த இந்தியா
மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தேவலாயங்களையும், இந்திய தூதரகத்தையும் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தேசிய புலான்ய்வு அமைப்பு அதிகாரிகள், இலங்கையை எச்சரித்துள்ளனர்.
மீண்டும் விசாரணை
ஆனால் நாசவேலை குறித்து மத்திய அரசு இலங்கையை எச்சரித்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. தற்போது இலங்கை குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கோவையில் கைதானவர்களுக்கு அந்த தாக்குதல் விவரங்கள் ஏதும் தெரியுமா? என்பது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.