மோத வந்தால் முழுசா வீடு சேரமாட்டீங்க... பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி பிபின் ராவத் வார்னிங்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், எதிரி நாடுகளின் எத்தகைய தாக்குதல் முயற்சிகளுக்கும், தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.
கார்கில் போரின்போது தடைகளை தகர்த்து மாபெரும் வெற்றியை இந்திய ராணுவ வீரர்கள் ஈட்டியதாக பாராட்டு தெரிவித்தார். எதிர்காலங்களில் போர் வந்தால், தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்காக இருக்கும். அதே சமயம், இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரையில், வீரர்களே முதன்மையான சொத்துகள் என்றும் பிபின் ராவத் கூறினார்.
மேலும், லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் வெளியான செய்திகள் குறித்து பதிலளித்த அவர், சீன படையினர் தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
டெம்சோ செக்டாரில் உள்ள திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது என்றார்.