ஒரு இன்ச் நிலத்தை கூட இந்தியா விட்டுக் கொடுக்காது.. சீனாவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங்
டெல்லி: இந்தியா தனது நிலப்பரப்பில் இருந்து ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்காது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கின் பாங்கோங் ஏரி பகுதிக்கு அருகே சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய ராணுவம் தடுத்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பல மாதங்களாக அங்கேயே குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இந்த நிலையில் ராணுவ மட்டத்தில் 9 சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதன் பிறகு பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளது.
இதையடுத்து சீனா மற்றும் இந்தியப் படைகள் இன்று காலை முதல் வாபஸ் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதை ராஜ்யசபாவில் இன்று ராஜ்நாத் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பாங்கோங் ஏரி அருகே.. சீன-இந்திய படைகள் வாபஸ் பெறப்படுகிறது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத் சிங் தகவல்
பிற பகுதிகளிலும் விலகுவார்கள்
பிற பகுதிகளிலும் சீன ராணுவத்தை பின்வாங்க செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கு பலன் கிடைக்கும் என்று நம்புவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது: பேச்சுவார்த்தைகளின் பலனாக, சீன ராணுவம் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளது. ஒருங்கிணைந்த வகையில், படிப்படியாக இந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படும்.
சீனா சொல்வதை ஏற்க முடியாது
இரு நாட்டு உறவுகளை பேணுவதில் இந்தியா எப்போதுமே மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருந்தது. அந்த பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் தாரைவார்த்து உள்ளது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவின் பல நிலப்பரப்புகளை சீனா தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது. அதையும் இந்தியா எப்போதுமே ஏற்றுக்கொண்டது கிடையாது.
ஒரு இன்ச் நிலம் கூட தரமாட்டோம்
லடாக் எல்லையில் சீனா தன்னிச்சையாக முன் நோக்கி வந்தது. இதையடுத்து இந்திய ராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டது. நமது இறையாண்மையை இந்திய ராணுவம் காப்பாற்றுகிறது. ஒரு போதும் நமது நாட்டின் ஒரு இன்ச் நிலப்பகுதியை கூட பிறருக்கு விட்டுத்தர மாட்டோம். ராணுவம் மற்றும் ராஜதந்திர ரீதியில் சீனாவுடன் கடந்த ஒரு வருடமாக நாம் தொடர்பில் இருந்து வருகிறோம்.
3 அம்ச திட்டம்
எல்லை கட்டுப்பாட்டு கோடு மதிக்கப்படவேண்டும், தன்னிச்சையாக இதில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படக் கூடாது. எந்த ஒரு சமரசமாக இருந்தாலும் இரு நாடுகளும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு தான் அதைச் செய்யவேண்டும் என்ற 3 அம்சங்களை சீனாவுக்கு திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளோம்.
சீனா அட்டகாசம்
நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் தேசிய பாதுகாப்பு என்று வந்துவிட்டால் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக
இணைந்து நிற்கும். கிழக்கு லடாக், பாங்கோங் ஏரி பகுதியில் சீனா அளவுக்கதிகமான ராணுவ வீரர்களை குவித்தது, அதிகப்படியான ஆயுதங்களை குவித்தது. அதை எதிர்கொள்வதற்கு நமது ராணுவ வீரர்களும் போதிய அளவுக்கு அங்கு நிலை நிறுத்தப்பட்டனர்.
சவாலை எதிர்கொள்வோம்
எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம். இருப்பினும் நமது நிலப் பகுதியை ஆக்கிரமிக்க வரும்போது அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எந்த ஒரு சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை நமது பாதுகாப்பு படைகள் உலகிற்கு உணர்த்தி விட்டனர். நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க ராணுவ வீரர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.