"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்"
Recommended Video
டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் ஹரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நானே தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன்.
பாகிஸ்தான் பக்கம் பாயும் நீரைப் பெறுவதற்கு ஹரியானா, ராஜஸ்தான் மாநில மக்களுக்கு அதிக உரிமை உள்ளது. இந்த நீரை இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்கள் போராட்டத்தில் உங்களுக்காக மோடியாகிய நானே போரிடுவேன்.
கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் நீடித்துவந்த தீவிரவாதத்தை அரசியல் சாசன பிரிவு 370 பிரிவை நீக்கியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த முடிவை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், மக்களிடமும், உலக நாடுகளிடமும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருந்தால், மீண்டும் அரசியலமைப்பு 370-ம் பிரிவை திரும்பக் கொண்டுவர முடியுமா? என்றார்.