பெரும் தலைவலியாக மாறும் சீனா.. லடாக் எல்லை மட்டுமல்ல.. திபெத் எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது
டெல்லி: திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் சீனா அதிக அளவிலான ராணுவத்தினரை குவித்து வருவது பற்றி செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் குளிர்கால வியூகத்திற்கான முன்னேற்பாடு இவை என்று எச்சரிக்கின்றனர் பாதுகாப்பு துறை நிபுணர்கள்.
இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் பிறகு இரு தரப்பு ராணுவ கமாண்டர்கள் மத்தியில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து உள்ளன.
Recommended Video
அதில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளது. இன்னமும் லடாக்கிலுள்ள, உண்மை எல்லை கட்டுப்பாட்டு கோடு (LAC) அருகே சீன ராணுவம் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் நவீன தளவாடங்களுடன் அங்கு முகாமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லடாக்கை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் வாலாட்ட நினைக்கும் சீனா- எல்லையில் புதிய சாலையால் டென்ஷன்
பின்வாங்கவில்லை சீனா
ஒரு பக்கம் சீனா எப்படியும் தனது படைகளைப் பின்னுக்கு நகர்த்தும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்தாலும், அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. கல்வான் பள்ளத்தாக்கிலும் கூட, அங்குள்ள நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகத்தான் சீன ராணுவம் பின்வாங்கி உள்ளதே தவிர, பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு அது பின் வாங்கவில்லை என்றும் சில ராணுவ பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செயற்கைக்கோள் படங்கள்
இதற்கு வலுசேர்க்கும் வகையில் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் செயற்கைக் கோள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்கள் எடுத்த புகைப்படங்களில் ஒரு முக்கியமான விஷயம் அம்பலமாகி உள்ளது. அதாவது திபெத் தன்னாட்சி பிராந்தியம் மற்றும் அக்சாய் சின் பகுதியில் சீனா கூடுதலாக படைகளை குவித்து வருகிறதாம். மேலும் தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல் செயற்கைக்கோள் புகைப்படங்களில் வெளியாகியுள்ளது.
கடும் குளிர்
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், லடாக் பகுதியில் சீன ராணுவம் இப்போதைக்கு பின்வாங்காமல் குளிர் காலம் வரை இழுத்தடிக்கும் சூழ்நிலை உள்ளது. அங்கு குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவும். அப்போது நமது எல்லையை ஆக்கிரமிப்பது சீனாவின் திட்டம் என்று சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கவும் ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குளிர்கால குயுக்தி
ஒருபக்கம் லடாக் எல்லையில் பிரச்சனை கொடுத்துக்கொண்டே, திபெத் மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பிரச்சினையை கொடுத்தால் இந்திய ராணுவத்தின் கவனம் சிதறும்.. குளிர்காலம் தங்கள் தரப்புக்கு மேலும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று சீனா நம்பக் கூடும் என தெரிகிறது. எனவே உடனடியாக லடாக் எல்லைப் பகுதியில் தற்போது உள்ள சீன ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது அவசியம் என்கிறார்கள், பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
திபெத் எல்லையில் சீன ராணுவம்
திபெத் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அங்கு ஹெலிகாப்டர்கள் வந்து இறங்குவதற்கு ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், பல புதிய கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் செயற்கைக்கோள் புகைப்படங்களை மூலம் அம்பலமாகியுள்ளது. இந்திய ராணுவமும் இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
பல வியூகங்கள்
பேச்சுவார்த்தையில் பலன் கிடைத்து, சீன ராணுவம் பின் வாங்கினால் அடுத்த கட்டமாக நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அல்லது சீன ராணுவம் முரண்டு பிடித்தால் அதற்கு எந்த மாதிரி பதிலடி கொடுக்கவேண்டும் என்று, அதற்கு தக்க, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
ராஜ்நாத் சிங் பேச்சு
லடாக்கிற்கு சமீபத்தில் சென்றிருந்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போது மறைமுகமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நம்புகிறோம், ஆனால் கண்டிப்பாக பேச்சுவார்த்தை வெற்றியில்தான் முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது, என்று அவர் கூறினார்.
தயார் நிலையில் இந்திய ராணுவம்
இதன்மூலம் நீண்டகால ஒரு விழிப்புணர்வு மற்றும் தயார் நிலைக்கு இந்திய ராணுவம் மனதளவிலும் உடலளவிலும் ரெடியாக இருக்க வேண்டும் என்ற ஒரு சமிக்ஞை ராஜ்நாத்சிங்கால் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது வரக்கூடிய தகவல்கள் சீனாவின் நாடு பிடிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்துவதாக தான் அமைந்துள்ளது. எனவேதான் இந்திய ராணுவமும் எல்லைப் பகுதிகளில் கூடுதலாக படைவீரர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. சுமார், 30,000 கூடுதல் பாதுகாப்பு படையினர் இந்தியா சீனா இடையேயான பல்வேறு எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுப் பொருள் வினியோகம் தடையின்றி கிடைப்பதற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இந்திய இராணுவம் இப்போது இருந்தே தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.