பாகிஸ்தானை சமாளிக்க செம பிளான்.. தாக்குதல் நடந்தபோது எல்லையில் பறந்த எம்ப்ரேயர் கண்காணிப்பு விமானம்
டெல்லி: இந்திய விமானப்படை விமானங்கள், இன்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. பாலகோட் உட்பட மொத்தம் 3 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் 12 போர் விமானங்களும் பத்திரமாக நாடு திரும்பின.
பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய தீவிரவாத முகாம் உள்ளது. இதனால் அங்கு, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், தற்கொலை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பலரும் அழிக்கப்பட்டனர்.
முன்கூட்டியே எச்சரிக்கும் விமானம்
இந்த தாக்குதலை இந்திய விமானப்படை சிறப்பாக திட்டமிட்டு நடத்தியுள்ளது. மொத்தம் 12 'மிராஜ் 2000' போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த அதே நேரத்தில், இந்திய விமானப்படையின், எம்ப்ரேயர் இஎம்பி-145 (Embraer EMB-145) வகை (முன்கூட்டியே எச்சரிக்கும்) விமானம் இந்திய எல்லையில் ரோந்து சுற்றியுள்ளது.
|
வழிகாட்டுதல்கள்
எம்ப்ரேயர் வகையை சேர்ந்த இந்த விமானம், எதிரி நாட்டு விமானங்களின் வருகையை கண்காணிக்கும் திறமை மிக்கது. மேலும், நமது நாட்டு ஜெட் விமானங்களுக்கும், வழிகாட்டுதலை கொடுக்கும் உபகரணங்களை கொண்டது. இந்த விமானத்தை எல்லையில் பறக்கவிட்டபடிதான், 12 போர் விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பியுள்ளது இந்திய விமானப்படை.
|
எச்சரிக்கை
இதன் மூலம், நமது நாட்டுக்குள் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்துவிடுவதை தடுப்பதோடு, நமது போர் விமானங்களுக்கு உரிய எச்சரிக்கையை பிறப்பிப்பது போன்றவற்றுக்கு, பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, IL 78 வகையை சேர்ந்த விமானங்கள், இந்திய போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பலாம்
நடு வானில் பறந்தபடி, பிற விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் திறமை கொண்டவை ஐஎல் 78 வகை விமானங்களாகும். எரிபொருள் தட்டுப்பாடு ஒருவேளை ஏற்பட்டால், நமது போர் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த விமானமும் எல்லையில் வட்டமிட்டபடி இருந்துள்ளது.
வெளியே வந்த தகவல்
இந்திய வான்வெளியில் இன்று காலை முதலே, அசாதாரணமான வகையில் பல விமானங்கள் பறந்துள்ளதை சர்வதேச, விமான டிராக்கர் கருவிகள் கண்டறிந்துள்ளன. அதன்படிதான் இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தற்போது தெரியவந்துள்ளது.